கொரோனா சிகிச்சையில் அரசியலும், ஆதாயங்களும் தேவையில்லை!

-சாவித்திரி கண்ணன்

கொரோனா இரண்டாம் கட்டம் மிக வீரியமாக மக்களை தாக்கி வருகிறது. இந்த நேரத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவது தான் குறிக்கோளாக இருக்கணும். இந்த சூழலில் எல்லா நல் வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய முறைகளில் உள்ள எந்தெந்த நல்ல மருந்துகள் கொரானாவை குணப்படுத்த உதவுகிறதோ…, அவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதில் ஏன் இத்தனை தயக்கங்கள், எதிர்ப்புகள்..?

முதல் கொரானா தொற்று ஏற்பட்ட போது, நீண்ட தயக்கத்திற்குப் பிறகு தான் சித்த மருத்துவம், ஆயூர்வேதம், ஹோமியோபதி..ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளையும் அனுமதித்தார்கள்!

ஆனால், அப்போது அலோபதி மருத்துவத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஹைட்ரோசிக்ளோரோச்வின், ஐவார்மெச்டின் போன்றவை தற்போது தவறான மருந்துகள் என கண்டறியப்பட்டு அவற்றை உலக சுகாதார நிறுவனம் நிகாரித்துள்ளது. அதே போல பிளாஷ்மா சிகிச்சை முறை அன்று கொண்டாடப்பட்டது. இன்று நிராகரிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் நமது சித்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர் கொரானாவை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என்ற போது அதை வேகமாக மறுத்தனர். பின்னர் தான் ஏற்கப்பட்டு அதை மக்கள் கணிசமாக பயன்படுத்தி பலன் கண்டனர். அதன் பிறகு ஜி.ஹெச்சிலேயே அதை ஆரம்ப கட்ட நோயாளிகளுக்கு கொடுத்து குணப்படுத்தினர் என்பது மாத்திரமல்ல, அனைத்து எம்.பி.பி.எஸ் மருத்துவர்களும் அதை உட்கொண்டனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மாத்திரமின்றி, பல தனியார் மருத்துவமனைகளும் அதை அன்றைய தினம் கணிசமாக பயன்படுத்தினர்.

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தமருத்துவ நிறுவனம் நிறைய கொரானா நோயாளிகளை குணப்படுத்தினர். சலிகிராமத்தில் ஜவகர் பொறியியல் கல்லூரியில் சித்தமருத்துவர் வீரபாபு ஆயிரக்கணக்கானவர்களை குணமாக்கினார். அதே போல டாக்டர்.வேலாயுதமும் குணமாக்கினார்.துர்அதிர்ஷ்டவசமாக அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவற்றில் எல்லாம் துளியும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அதேசமயம் அமைச்சர் மாபாய் பாண்டியராஜன் மிகுந்த ஆர்வமெடுத்து ஏதோ தன் சக்திகுக்கு உட்பட்ட வகையில் வியாசர்பாடி, தண்டையார் பேட்டை போன்ற இடங்களில் சித்த மருத்துவம் மூலமாக இயற்கை வாழ்வியல் அணுகுமுறையில் கொரானா சிகிச்சையில் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்பெற உதவினார்.

இதன் தொடர்ச்சியாக அன்றைய முதல் அமைச்சரின் சேலம் மாவட்டத்தில் கோரிமேடு அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. துணை முதலமைச்சரின் தேனீ தொகுதியிலும் சித்த மருத்துவ சிகிச்சை நடந்தது.

திருவான்மியூரில் உள்ள இன்காப்சில் கபசுரக் குடிநீர் பொடியை வாங்க மிக நீண்ட கியூ வரிசையில் மக்கள் நின்றனர். உண்மையில் கபசுரக் குடிநீரானது கொரானா வரமல் தடுக்கவும்,வந்தால் விரைவில் குணமாவதற்கும் உதவிகரமாக இருந்தது.

தமிழகத்தில் ஏற்கனவே டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன!

Arsenicum album 200c.என்ற ஹோமியோ மருந்தை அன்று ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரைத்ததால் வீடுவீடாக வழங்கப்பட்டது.

ஆயூர்வேத சிகிச்சைகளும் கொரானாவிற்கு தரப்பட்டன. எல்லாவற்றிலும் நல்ல ரிசல்ட் கிடைத்தது. ஆனால் இன்றோ  எல்லாவற்றையும் அம்போவென விட்டுவிட்டு அலோபதி மருத்துவத்தில் மட்டுமே சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்கு காரணம் பாரம்பரிய மருத்துவத்தால் பலன் கிடைக்கிறது என்பதை அலோபதி மருத்து லாபி அங்கீகரிக்கவில்லை. அப்புறம் தங்கள் செல்வாக்கும்,முக்கியத்துவமும் குறைந்துவிடும் என்று கருதுகிறார்களோ என்னவோ..! ஏனென்றால், அலோபதி மருத்துவம் பெரும் பணம் சம்பந்தப்பட்டது .கார்ப்பரேட்டுகள் சம்பந்தப்பட்டது.எல்லாவற்றையும்விட அவர்களின் கெளரவம் சம்பந்தப்பட்டது.

இதே அலோபதி மருத்துவத்தில் Dexamethasone என்ற மாத்திரை கொரோனா நோயாளிகளுக்கு மிக நன்மை செய்கிறது! அதன் விலை இரண்டே ரூபாய் தான்! ஆனால், அதை சில மருத்துவர்கள் வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளனர் என எம்.பி.பி.எஸ் மருத்துவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். 1,500 ரூபாய் பெறுமானமுள்ள ரெம்டெசிவர் மருந்திற்கு மக்களை ஆளாய் பறக்கவிடுகிறார்கள்!

அதே போல ஹோமியோவிலும் சுமார் 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்குள் கொரானா சிகிச்சைக்கான நல்ல மருந்துகள் உள்ளன என்கிறார் டாக்டர் பிரேமா! அவர் கூறியவற்றை கீழே தந்துள்ளேன்.

# அசதி , காய்ச்சல், வயிற்றுப்போக்கு , பயம் – Arsenicum album 200c.

# காய்ச்சல், அதிக உடல்வலி – Eupatoereum perfoliatum 200c.

# வறட்சி – வாய், தொண்டை, மலச்சிக்கல்; 2. இவற்றுடன் காய்ச்சல், தலைவலி; 3. வரட்டு இருமல், லேசான மூச்சுத்திணறல் ~ இம்மூன்றில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட நோய்க்குறிகள் இருந்தால் – Bryonia alba 200c.

# இவற்றுடன் நுகரும் தன்மை, ருசி – குறைதல்; – pulsatilla 200c or sepia 200c.

# திடீர்/ தீவிர மூச்சுத்திணறல் – முழுக்க முழுக்க மருத்துவரது நேரடி ஆலோசனையில் மட்டுமே. இதை பொதுமக்கள் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படுவோர் மிக குறைவே. பயன்தரும் மருந்துகள் – Bryonia or Phosphorus or APIs Mellifica or Crotalus Horridus or depends upon the acute pathology presented. To be chosen only by a Homeopathy physician.

சரி.சென்ற ஆட்சியாளர்கள் போல இல்லாமல் இந்த ஆட்சியாளர்கள் பாரம்பரிய மருத்துவமுறைகளையும் ஒரளவு அங்கீகரிக்க முன்வந்துள்ளமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியம் பொறுப்பு ஏற்றபிறகு மகிழ்ச்சியான செய்திகளை சொன்னவண்ணம் உள்ளார்!  முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க  சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் கடந்தாண்டு செயல்பட்டு வந்த சித்தா கோவிட் மையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது, நல்ல முயற்சியே!

240 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது  இம்மையம்! இம்மையத்தின் மூலம் கடந்தாண்டு 2,290 நபர்கள் கோவிட் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்பது கவனத்திற்குரியதாகும்!

மேலும், தமிழகம் முழுவதும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இயற்கை முறை மருத்துவமனைகள் விரிவுபடுத்தப்படும் என்ற முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இம்மாதத்திற்குள்ளாக  தருமபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவாரத்திற்குள்ளாக தென்சென்னையில் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்தா கோவிட் மையம் தொடங்கப்படவுள்ளது என்பதும் மகிழ்ச்சிக்குரியதே!. மேலும், இயற்கை முறை மருத்துவத்தில் தற்போது 1,400 பேருக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து, மேன்மேலும் பல இடங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது உள்ளபடியே மிக ஆரோக்கியமான அணுகுமுறையாகும்.

இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உள்மருந்துகளாக கபசுரக்குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவையும், வெளிமருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின்பாம் போன்றவைகளும், ‘உணவே மருந்து’ என்ற அடிப்படையில் தினமும் காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி ஆகிய சிறப்பு மூலிகை வகை உணவுகள் நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புற சிகிச்சைகளாக காலையில் திறந்தவெளியில் யோகா, பிராணாயாமம், வர்மசிகிச்சை  முத்திரைகள், மூலிகை நீராவிசிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் ஒருங்கிணைந்த வகையில் நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற செய்திகள் கொரோனா சிகிச்சையில் அரசியலையும், ஆதாயங்களையும் தவிர்த்த பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும்! இதற்கான எதிர்ப்புகளால் இதை கைவிட்டுவிடாமல் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time