‘தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி’ என்ற கட்டுரையை நமது அறம் இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தோம்!
அதற்கு விரிவான ஒரு மறுப்பு கட்டுரையை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.அன்புமணி நமக்கு அனுப்பினார். அந்த மறுப்பு பிரசுரமாகியுள்ளது.
இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை,அடித்தளமிட்டேன்
தடுப்பூசி விவகாரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இன்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன! அவர்கள் வைத்ததே விலை! 138 கோடி மக்களின் உயிர் அவர்கள் தயவில் என்றாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களை அன்புமணி திட்டமிட்டு முடக்கியதன் பின்னணியில் இந்த விவகாரத்தை அலசினால், அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வரும்.
திரு. அன்புமணி மறுப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றை மூன்று அம்சங்களில் அடக்கலாம்!
# உண்மைகளை மறைக்க செய்யப்படும் மழுப்பல்கள்!
# துணிந்து சொல்லப்பட்ட பொய்கள்!
# அவர் அமைச்சராக இருந்த துறை பற்றிய அடிப்படை தகவல்களைக் கூட அறியாதவராக இருந்துள்ளார்!
இந்திய மக்களின் குறிப்பாக பிறந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பை தடுக்கும் விதத்தில் பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரித்து வழங்கி உயிர்காத்து வந்த நமது பொதுத் துறை நிறுவனங்களின் மருந்து தரம் குறைந்தவை என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டவே இல்லை! ஆனால், அப்படி சொன்னதாக அன்புமணி மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டுள்ளார்! அவர்கள் அறிவுறுத்தியதெல்லாம், இந்த நிறுவனங்களின் உள் கட்டமைப்பை இன்னும் மேம்படுத்த வேண்டும். தயாரிப்பு வழிமுறைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதேயாகும்! இது வழக்கமாக சொல்லப்படுவதேயாகும்!
இவற்றை செய்வதற்கு வேண்டியதெல்லாம் நிதி ஒதுக்கீடு மட்டுமே! அந்த நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டிய அமைச்சர் அன்புமணி 2004 தொடங்கி, அதை செய்யாமல் தட்டிக் கழித்து வந்தார். 2007 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மீண்டும் அதை வலியுறுத்தியது. அவ்வளவே! அந்த அமைப்பின் வழிகாட்டுதல்களை நாம் பின்பற்றாதபட்சத்தில் நாம் நம் மருந்துகளை வெளி நாடுகளுக்கு அனுப்ப முடியாது என்பது மட்டுமே ஒரே பின்னடைவு! ஆனால், நம் உள் நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு அந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லவில்லை. பொதுவாக அவர்களுக்கு மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் அளவுக்கான எக்சிகியூடிவ் அதிகாரம் கிடையாது.
ஆனால், இதை ஒரு சாக்காக வைத்து இந்த மகத்தான பொதுத் துறை நிறுவனங்களின் உரிமத்தை தன்னிச்சையாக ரத்து செய்தார் அன்புமணி. இதன் மூலம் அவற்றின் சேவை கோடிக்கணக்கான நம் மக்களுக்கு கிடைக்காமல் செய்தார்! அது மட்டுமின்றி அந்த நிறுவனங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தவையும் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்தார்!
இந்த மேற்படி மூன்று நிறுவனங்களும் இந்திய தடுப்பு மருந்து தேவையில் பத்து சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யவில்லை என அன்புமணி கூறுவது உண்மையல்ல. அவருக்கு தான் பணியாற்றிய துறை குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருந்திருக்க முடியுமா? அல்லது துணிந்து பொய் சொல்கிறாரா..? எதுவெனத் தெரியவில்லை!
சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி லேபராட்டரியானது குழந்தைகளுக்கான டி.பி எனப்படும் காச நோய்க் கிருமியால் ஏற்படும் முளைக்காய்ச்சல் நோயை தடுக்க பி.சி.ஜி என்ற தடுப்பு மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் ஒரே ஏகபோக நிறுவனமாக திகழ்ந்த பெருமைக்குரியது. அதுவும் ஆண்டுக்கு 80 மில்லியன் டோசஸ் தயாரிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த நிறுவனமாக திகழ்ந்தது! மேலும் சிறுநீரகப்பை புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் வீரியமிக்க பி.சி.ஜி மருந்தும் இங்கு தயாரானது.
குன்னூரில் இயங்கிய பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ‘டெட்னஸ் டாக்சிட்’ என்ற மிக அவசியமான மருந்தை ஆண்டுக்கு 180 மில்லியன் டோசஸ் தயாரித்து வந்தது. பாஸ்டர் இன்ஸ்டிடிய்யூட்டும் போல ஹிமாச்சலில் உள்ள சி.ஆர்.ஐயும் இந்தியாவின் பெரும்பானமை மக்களுக்கான பல மில்லியன் டோசஸ் DPT என்ற முத்தடுப்பு மருந்துகளை தயாரித்து வந்தன! தென் கிழக்கு ஆசியாவிலேயே மஞ்சள் காமாலைக்கு சிறப்பு மருந்து தயாரித்ததும் இந்த நிறுவனம் தான்!
மொத்தத்தில் diphtheria, pertussis, tatanas, poliomyelitis, typhoid மற்றும் குழந்தைகளுக்கு வரும் காச நோய்க்கான மருந்து, நாய்க்கடிகான ஆண்டி ராபிஸ் வாசின், பாம்புக்கடிக்கான மருந்து.. இப்படி நிறைய அத்தியாவசியமானவற்றை தயாரித்து மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கும் ,இலவசமாகவும் தந்த நிறுவனங்களே இந்த மூன்றும்! குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இந்தியாவில் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் நலனுக்கு மட்டுமல்ல, குழந்தை பிறப்புக்கு முன்பு அவற்றின் கர்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நிறுவனங்களே ஆபத்பாந்தனாக திகழ்ந்தன.
இத்தகைய அரிய சேவைகளை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்புக்கானது தான் சுகாதார அமைச்சர் பதவி என்ற தார்மீக உணர்வு அவருக்கு சிறிதளவாவது இருந்திருந்தால் 2004 ஆம் ஆண்டிலிருந்தே அவற்றுக்கு போதுமான நிதியை ஒதுக்கி வசதிகளை மேம்படுத்தி இருக்க வேண்டும். அல்லது அவற்றை வேறொரு இடத்தில் நவீன வசதிகளுடன் செயல்படத்தக்க வகையில் புதிய கட்டுமானத்தை உருவாக்கிவிட்டு, அவற்றை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். அது வரையிலும் அவற்றை தடையின்றி செயல்பட அனுமதித்து இருக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல், அதன் உரிமங்களை ரத்து செய்தது பஞ்சமா பாதகம்! அப்படி உரிமத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என அப்போதே இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர். முடக்கப்பட்ட இந்த பொதுத் துறை நிறுவனங்கள் மிக லாபகரமாகவும் இயங்கியவை என்பது தான் முக்கியமானது.
இது குறித்து அப்போதே ‘பிரண்ட் லைன்’ ஆங்கில இதழ் (ஏப்ரல்-11 -2008) மிகச் சிறப்பான கட்டுரை எழுதி இருந்தது.அத்துடன் இப்படி இந்த மூன்று நிறுவனங்கள் முடக்கப்பட்டதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நாட்டில் தரமான தடுப்பூசிகள் இன்றி பற்றாகுறைகளும்,பச்சிளங் குழந்தைகள் மரணங்களும் நிகழ்ந்தன. இப்படி தடை செய்யப்பட்ட ஆண்டே திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட மூன்று குழந்தைகள் மரணித்தன. கடந்த 13 ஆண்டுகளாக இப்படி கணக்கில்லாமல் உயிரிழந்த குழந்தைகள் எத்தனையோ…? தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட கர்ப்பிணிகள் எத்தனையோ…? தனியார் துறையில் அனைத்தையும் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவோ…?
இன்று வரை தடுப்பூசி உற்பத்தியில் தன்னிறைவு எட்டமுடியாத வகையில் இந்தியா திணறுவதற்கு அடித்தளம் அமைத்தவரே அன்புமணி தான்! அந்த நிறுவனங்கள் முடக்கப்படாமல் இருந்திருந்தால் சென்ற ஆண்டே கொரானாவிற்கு மிகத் தரமான தடுப்பூசி உற்பத்தி தொடங்கி அனைவருக்கும் கிடைத்திருக்கும்! ஆனால், தற்போது நீதிமன்ற தலையீடு, பொதுமக்களின் தார்மீக கோபம் மற்றும் மீடியாக்களின் பிரச்சாரம் ஆகியவற்றையடுத்து இந்த நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் தரப்பட்டுள்ளன!
தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடியவர் அன்புமணி
இப்படி மனதறிந்தே அக்கிரமங்களை அவர் செய்தற்கான காரணம், இந்த நிறுவனங்களை முடக்குவதன் மூலம் இவற்றின் தயாரிப்பை தனியார் துறைக்கு வழங்கி, அதன் மூலம் சுயஆதாயம் அடையலாம் என்ற நோக்கமே என்ற விமர்சனங்கள் பல தளத்திலும் இடையறாது வெளிப்பட்டவண்ணம் உள்ளன! அத்துடன் அவருடைய உறவினர்கள் பலனடையும் விதமாக கும்மிடிபூண்டியில் கிரின் சிக்னல் பயோ பார்மா என்ற தனியார் நிறுவனம் உருவாக காரணமானார் என்பதெல்லாம் அந்த காலங்களிலேயே பல மீடியாக்களிலும் விலாவாரியாக வந்துள்ளன!
குறிப்பாக அமைச்சர் அன்புமணி நமது பொதுத் துறை நிறுவனங்களை முடக்கிய பிறகு கடும் கண்டணங்கள் எழுந்தன. அதை சமாளிக்க, அவற்றை மீண்டும் இயக்குவது குறித்து ஒரு ஆலோசனைகுழு அமைத்தார்! அந்த ஆலோசனைக் குழுவில் அவர் பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்த துடிக்கும் தனியார் மருந்து நிறுவன தலைவர்களையும், பொதுத் துறை நிறுவன சீரழிவுக்கு காரணமான அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து உறுப்பினர்களாக போட்டார்! அதாவது குப்புற தள்ளிய குதிரை, குழிபறித்த கதையாக!
அப்போது அவருடைய நடவடிக்கைகளை எதிர்த்து கம்யூனிஸ்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் டி,கே.ரங்கராஜன், கே.சுப்பராயன், சீதாராம் யெச்சூரி,பிருந்தா காரத் அதிமுக எம்.பி மலைச்சாமி உள்ளிட்ட பலர் பெருமுயற்சி செய்தனர். மேற்படி நிறுவனத்தின் ஊழியர்கள், சையிண்டிஸ்டுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தங்கள் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்ளத் தயார்.ஆனால், பொதுத் துறை நிறுவனங்களை முடக்கவேண்டாம் என்று மன்றாடினர்! இதற்காக கையெழுத்து இயக்கங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் ஆகியவையெல்லாம் நடந்தன! தமிழகத்தில் உள்ள பொதுச் சிந்தனையுள்ள முன்னணி மருத்துவர்கள் பலரும் களம் இறங்கி இந்த பேரழிவு முடிவுக்கு எதிராகப் போராடினார்கள். அப்படி போராடிய ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர். இந்த பொதுத் துறை நிறுவனத்தில் இயக்குனராக இருந்த இலங்கேஸ்வரனை ‘கரப்ட்’ ஆக்கி தனக்கு சாதகமாக அவரை செயல்பட தூண்டினார் அன்பு மணி ராமதாஸ். இதனால், ஊழல்,முறைகேடு போன்ற பல புகார்களுக்கு அவர் ஆளாகி அவருக்கு சார்ஜ்ஷீட் கொடுக்கப்பட்டது!
பொதுவாக அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் சுகாதாரத்துறை பெரும் ஊழல்மயமாகவும், முறைகேடுகளின் அணிவகுப்பாகவும் திகழ்ந்தது! இது குறித்து முறையான விசாரணை நடத்தினால் அன்புமணி சட்டபூர்வமான நடவடிக்கைகளை சந்திக்க நேரும். இந்த காரணங்களுக்காகத் தான் வீரியமிக்க கட்சியாக திகழ்ந்த பாமக, தற்போது பாஜகவின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் கட்சியாக மாறிப்போனது. பாமகவின் சார்பில் பலர் மத்திய அமைச்சரவையை அலங்கரித்துள்ளனர். அதில் ரயில்வே அமைச்சராக இருந்த வேலு மற்றும் தலித் ஏழுமலை ஆகியோர் மிகச் சிறந்த நிர்வாகிகள் எனப் பெயரெடுத்தனர்!
Also read
செங்கல்பட்டிலே ஒருங்கிணைந்த தடுப்புசி வளாகத்தை உருவாக்க ( ஐ.வி.சி) அதுவும் தனியார் அரசு கூட்டு முயற்சியில் இயங்கும் வண்ணம் ஒரு அரைகுறை பிராஜக்டை (160 கோடி )அன்புமணி செய்தார். இன்று வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த 13 ஆண்டுகள் அதை நடைமுறைப்படுத்த அவர் ராஜ்ஜியசபா உறுப்பினராக இருந்தும், ஆளுங்கட்சிக்கு ஆதரவானவராக இருந்தும் அந்த வளாகம் பெரும் நிதியை முழுங்கிவிட்டு பயனற்று கிடப்பதை தடுக்க முடியவில்லை. இருபவனவற்றை அழித்தொழிக்க முயன்று, இல்லாத ஒன்றை செய்வதாக சொல்லி பெரும் நிதியை வீணடித்து, இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை சீர்குலைத்தது தான் அவர் செய்த சாதனையாகும்!
அன்புமணிக்கு சிறப்பான பதிலடி பதிவு. இதை நீங்கள் அவர் மறுப்பிற்கு கீழே பதிவிட்டு ஒரே கட்டுரையாக போட்டிருக்கலாம். சிலர் அவரின் பதிலைப் படித்துவிட்டு இதை படிக்காவிட்டால் அவர் சொன்னது சரி என்று நினைக்கக்கூடும்.
ச. நந்தகுமார்
அறம் சம்மந்தமில்லை. இந்த இதழுக்கு. கொடூர வெறுப்பு நிறைந்த கட்டுரை.அன்புமணியை குற்றவாளியாக்கி பார்ப்பதில் சுவைகண்டுள்ளீர்கள்.தரமில்லாத குன்னுர் தடுப்பூசி போட்டு செத்திருந்தால் யார் பொறுப்பு.செங்கல்பட்டு மையத்தை திறக்கஆவனசெய்யாமல்பொய்பிரசாரம்.Frontlion உத்தமபத்திரிகையா.அந்தபார்ப்பன கும்பல் ஈழத்தைஆதரித்தது கிடையாது.பொதுவுடமையும் அவ்வாறே.வாசுகி இலங்கையை ஆதரித்தவர்.சரி10.5% வயிறு எரியுதா. அன்புமணி மட்டும் 25 துறையில் இருந்தாரா.வெறுப்பு அரசியல். காழ்புணர்ச்சி கட்டுரை.
தமிழர்களுக்கு வந்த வேதனையும், சோதனையும்
அறம் இணைய இதழில் ‘இளைய பல்லவன்’ என்ற ஒருவர், பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணைய நாளிதழில் வந்த கட்டுரை ஒன்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்.
பிசினஸ் ஸ்டாண்டர்டில் வெளிவந்த அந்தக் கட்டுரை, இந்திய நாடு தன்னுடைய தடுப்பூசித் தேவைகளுக்கு தனியார் துறையை மட்டுமே நம்பி இருப்பதற்கான ஒரே காரணம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் என்று குற்றஞ்சாட்டியிருந்தது.
தடுப்பூசித் தட்டுப்பாடு, அரசுக்கு எதிரான மிகப்பெரிய குற்றச்சாட்டாக மேலெழுந்திருக்கிறது. இந்திய நாட்டில் இதுவரை செயல்படுத்தப்பட்ட தடுப்பூசித் திட்டங்கள் அனைத்துமே ‘அனைவருக்கும் தடுப்பூசி’ திட்டங்களாக (Universal Immunization) முழுக்கமுழுக்க நடுவண் அரசினால் செயல்படுத்தப்பட்டன. இதற்கான நிதியை நடுவண் அரசு அளித்தது. ஆனால் இந்த முறை மாநிலங்கள் தாங்களே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசு சொல்லியிருக்கிறது.
இது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் பிசினஸ் ஸ்டாண்டர்டில் வந்த கட்டுரை ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு, இந்த நிலைமைக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் காரணம் என்று கூறியிருந்தது. பாரத் பூஷன் என்பவர் எழுதியிருந்த அந்தக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்திருந்தார். அதுவும் பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழில் வெளியிடப்பட்டது.
அறம் இணைய இதழில் பாரத் பூஷனின் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. பிரச்சனையின் ஒரு பகுதியை வாசகர்களுக்கு எடுத்துச்சொல்லும் இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களுக்கு, அதன் உண்மையான பக்கத்தை காட்ட வேண்டும் என்பதற்காக அன்புமணி ராமதாஸ் பிசினஸ் ஸ்டாண்டர்டில் எழுதிய விளக்கத்தின் மொழிபெயர்ப்பு அறம் இதழுக்கு அனுப்பப்பட்டு வெளியானது.
பாரத் பூஷனின் கட்டுரையை மொழி பெயர்ப்பு செய்த இளைய பல்லவன் என்பவர் ஏதோ தன்னுடைய கட்டுரைக்கு அன்புமணி ராமதாஸே பதில் அளித்திருப்பதாக நினைத்துக்கொண்டு அதற்கு பதில் கட்டுரை எழுதியிருக்கிறார்!
அது கொஞ்சம் ஓவர் தான்!
அக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘’இந்த மேற்படி மூன்று நிறுவனங்களும் இந்திய தடுப்புமருந்து தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யவில்லை என அன்புமணி கூறுவது உண்மையல்ல. அவருக்கு தான் பணியாற்றிய துறை குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருந்திருக்க முடியுமா? அல்லது துணிந்து பொய் சொல்கிறாரா?’’
இப்படிப்பட்ட கருத்துகளை ஒரு மருத்துவ வல்லுநரோ, பொருளாதார அறிஞரோ அல்லது ஆழ்ந்த பொது அறிவு உள்ளவரோ கூறியிருந்தால் அவருக்கு விளக்கம் தருவது என்னைப் போன்றோரின் கடமையாக இருக்கும்.
இளைய பல்லவனுக்கு எப்படிப்பட்ட அறிவு இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையை படிக்கும்போது அறியமுடிகிறது. இவரைப் போன்றவர்கள் எழுதுவதற்கு பதிலளிப்பது தேவை இல்லாத ஒன்று. ஆனால் அதே சமயம் இணையதளங்களில் வீசப்படும் குப்பைகளை உண்பது மன நலக் கேடு. தமிழ் கூறும் நல்லுலகின் வாசகர்கள் எவரேனும் ஒருவேளை இந்த குப்பையைப் படித்து மனம் பாதித்திருந்தால் அவர்களுக்கு உண்மையை விளங்கவைக்க வேண்டும் என்பதற்காக சில கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்து 12 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், இப்பொழுதுள்ள பிரச்னைக்கு அவரை நினைவு கூர்வது ஒருவகையில் பொருத்தமுடையது. இந்திய நலவாழ்வுத் துறையில் மாபெரும் சாதனைகளைச் செய்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ். இந்திய நலவாழ்வுத் துறையை ‘அன்புமணிக்கு முன்’ ‘அன்புமணிக்குப் பின்’ என்று இருவேறு காலங்களாகப் பிரிக்கலாம்.
உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டமான ‘தேசிய ஊரக சுகாதார திட்டம்’ (National Rural Health Mission) தொடங்கப்பட்டது அன்புமணியால்.
இந்திய மண்ணில் இருந்து போலியோ நோய் அகற்றப்பட்டது மருத்துவர் அன்புமணி காலத்தில்.
பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம், பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் போன்ற நலவாழ்வுக் குறியீடுகள் அனைத்தும் விடுதலை அடைந்து இந்தியா குடியரசாகிய 54 ஆண்டுகளில் காணாத உயர்வை அன்புமணி அமைச்சராக இருந்த 2004-2009 ஆண்டுகளில் கண்டன.
ஆகையினால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கி மூன் அவரை தேடி வந்து சந்தித்து, பாராட்டி விட்டுப் போனார். ‘போலியோ வீரன்’ என்ற விருதை வழங்கி உலக ரோட்டரி சங்கம் பாராட்டியது. அவருடைய பணிகளைப் பாராட்டி ‘லூதர் டெர்ரி விருது’ என்ற மிக உயரிய விருது வழங்கப்பட்டது.
இதுவரை எந்த ஒரு நலவாழ்வுத் துறை அமைச்சரும் புகையிலைக்கும், மதுவுக்கும் எதிராக போராடத் துணிந்ததில்லை. அந்த நிறுவனங்களுக்கு அவ்வளவு பெரிய செல்வாக்கு! பணத்தால் மயக்க முடியாவிட்டால் மிரட்டி பணிய வைத்து விடுவார்கள். அன்புமணி பணத்துக்கும் மயங்கவில்லை. மிரட்டலுக்கும் அஞ்சவில்லை. ஆகையினால்தான் ஒவ்வொரு சிகரெட் பெட்டியின் அட்டையிலும் புகையிலையின் ஆபத்தை விளக்கும் படங்கள் வெளிவருகின்றன. சின்னத் திரையிலோ, பெரிய திரையிலோ ரஜினிகாந்த் ஸ்டைலாக சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடித்தால் ‘புகையிலை ஆபத்தானது’ என்ற எச்சரிக்கை வாசகம் வருகிறது.
அன்புமணியின் வலியுறுத்தலின் காரணமாக இனிமேல் திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போல நடிக்க மாட்டேன் என்று பாலிவுட்டின் முடிசூடா மன்னன் சாருக்கானும், சூப்பர் ஸ்டார் ரஜனி காந்தும், நடிகர்கள் கமலும், சூரியாவும், விக்ரமும் அறிவித்துவிட்டார்கள். அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போல நடித்து, அன்புமணியின் எதிர்ப்புக்குப் பிறகு அவரும் விட்டுவிட்டார்.
அன்புமணிக்கு முன்னரும், பின்னரும் பலர் அப்பதவியில் இருந்திருந்தாலும் இந்திய மக்கள் அனைவருக்கும் ‘நலவாழ்வுத் துறை அமைச்சர்’ என்றால் அன்புமணியின் பெயர் மட்டும் நினைவுக்கு வருவது இப்படிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளால் தான்!
இந்திய நாட்டில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கென்று 3 பாரம்பரிய அரசு நிறுவனங்கள் இருக்கின்றன. 1899 ஆம் ஆண்டு டபிள்யூ. ஜி. கிங் என்பவரால் தொடங்கப்பட்ட, சென்னை அடையாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிங் இன்ஸ்டிடியூட் தான் இந்தியாவின் மிகப்பழைய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் என்பது நமக்குப் பெருமை. 1907 ஆம் ஆண்டு குன்னூரில் தொடங்கப்பட்ட பாஸ்டர் நிறுவனமும், 1905 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள கசாலியில் தொடங்கப்பட்ட மத்திய தடுப்பூசி ஆய்வகமும் மற்ற இரண்டு நிறுவனங்கள்.
இம்மூன்று நிறுவனங்களும் பெரியம்மை போன்ற நோய்களை இந்திய மண்ணில் இருந்து அகற்றுவதற்காக அளப்பரிய பங்காற்றி இருக்கின்றன. ஆயினும் இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளின் தரம் உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள தரக் ககட்டுப்பாடுகளின் (WHO – Pre-Qualification Standards) தரத்தில் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள், இந்திய தர வழிகாட்டு முறைகளையும் (Good Manufacturing Practices – Indian GMP) நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கான காரணங்களை விளக்குவதில் சிக்கல்கள் இருக்கின்றன. அந்நிறுவனத்தின் பணியாளர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட வில்லை என்று கருத இடமிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களும் நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய கட்டடங்களில் இயங்குகின்றன. இவை புராதன கட்டடங்கள் என்பதால் இவற்றை இடிக்கவோ, மாற்றிக் கட்டவோ முடியாது.
அந்தச் சூழலில், அந்நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளை இந்தியா பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்டது. இந்த நிறுவனங்களை மூடுவதற்கு மறுத்த மருத்துவர் அன்புமணி வேறு வழியின்றி அவை தற்காலிகமாக தடுப்பூசி உற்பத்தி செய்யக்கூடாது என்று மட்டும் ஆணையிட்டார்.
‘அந்நிறுவனங்களை அன்புமணி மூடி விட்டார்’ என்ற பொய்ப் பிரச்சாரத்தை முன்னெடுத்து பெரும் அரசியலைச் செய்தன கம்யூனிஸ்ட் கட்சிகள். 13 ஆண்டுகள் கழித்து இன்று வரை அந்த நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிப்புப் பணி மீண்டும் தொடங்கப்படவில்லை என்பதை வருத்தத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. அந்த நிறுவனகளின் தரத்தை உயர்த்துவதற்காக செலவிடப்பட்ட பல நூறு கோடி ரூபாய்கள் விழலுக்கு இறைத்த நீராயின.
அதுமட்டுமின்றி, இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து செய்யும் உற்பத்தி இந்தியாவின் தடுப்பூசி தேவையில் 10% அளவுக்கு மட்டுமே நிறைவு செய்தன. இந்த நிறுவனங்களுக்கு மாற்றாகவும், அதேசமயத்தில் இந்தியாவுக்குத் தேவைப்படும் அத்தனைத் தடுப்பூசிகளையும் அரசே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் செங்கல்பட்டுக்கு அருகில் இருந்த தமிழக அரசுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் அமைப்பதற்கான பணியைத் தொடங்கினார் அன்புமணி ராமதாஸ். அறிவிப்பு வெளிவந்தவுடன் 2008 ஆம் ஆண்டு 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் இந்திய தர வழிகாட்டு முறைகளை (Good Manufacturing Practices – Indian GMP) மட்டுமல்ல, உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள தரக் ககட்டுப்பாடுகளை (WHO – Pre-Qualification Standards) நிறைவு செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும்.
2009-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதிய நடுவண் நலவாழ்வு அமைச்சர் இத்திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்து இப்பொழுது ஏறக்குறைய நிறைவு பெற்றுவிட்டன. அந்த நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தனியார் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்திருக்கும் என்பதை உங்களுடைய ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன்.
அன்புமணியின் கனவுத் திட்டம் மட்டும் பத்தாண்டுகளுக்கு முன்பே நிறைவேறியிருந்தால், சீரம் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் நிறுவனத்தின் முன்பு கை கட்டி, வாய் பொத்தி தடுப்பூசி வாங்கும் நிலை இந்திய நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது.
இந்த வளாகம் ஆசியாவின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையம் ஆகும். நம் நாட்டின் தடுப்பூசித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து, தட்டம்மை தடுப்பூசி ஆகிய ஆறு வகையான தடுப்பு மருந்துகளை இங்கே உற்பத்தி செய்ய முடியும். நற்செய்தி என்னவென்றால், இங்கே கொரோனா தடுப்பூசியும் உற்பத்தி செய்யலாம்! இன்னமும் 300 கோடி ரூபாய் முதலீடு செய்தால் இன்னும் ஆறு மாதத்திற்குள், மாதத்திற்கு 2 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்த வளாகத்தில் உற்பத்தி செய்ய முடியும். இத்திறனை வெகுவிரைவில் 100 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்த்த முடியும்.
கொரோனா பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. அவற்றில் ஒன்று கல்வி, மருத்துவம், சாலை வசதி, ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளை அரசு தன் வசமே வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.
தனியார்மயமாக்கல் எவ்வளவு ஆபத்தானது என்பதை கொரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும் முறை நமக்கு உணர்த்துகிறது.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. கொரோனா பெருந்தொற்று ஒரு தேசியப் பேரிடர். 1897 ஆம் ஆண்டின் பெருந்தொற்றுச் சட்டம் திருத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய பெருந்தொற்று அவசரச் சட்டத்தின் (The Epidemic Diseases (Amendment) Ordinance, 2020) அடிப்படையிலேயே ஊரடங்கு போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நடுவண் அரசு தனியார் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஒருவேளை அதற்கான அதிகாரத்தை இச்சட்டம் வழங்கவில்லை என்றால் புதிய அவசரச் சட்டத்தை நிறைவேற்றியாவது தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களை அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
செங்கல்பட்டில் அன்புமணி அமைத்த நடுவண் அரசின் தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகளைத் தொடங்கவேண்டும். இதனை தமிழக அரசே ஏற்று நடத்தவும் வாய்ப்பிருக்கிறது.
எல்லா முயற்சிகளையும் செய்து தேவைப்படும் அளவுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும்.
பேரிடர் காலத்திலும், கொத்து கொத்தாக மக்கள் செத்து விழும் போதும் வெறுப்பு அரசியல் செய்வது சிலருக்கு பணியாக இருப்பது வேதனை. அவர்கள் ஒன்றுமறியாத முட்டாள்களாக இருப்பது சோதனை.
மருத்துவர். இரா. செந்தில்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்