கொட நாடு கொலைகள்! கட்டளையிட்டது யார்? கைதாவது யார்..?

-சாவித்திரி கண்ணன்

அதிர வைக்கிறார் ஸ்டாலின். எகிறி துடித்து பதைபதைக்கிறார் எடப்பாடி! தலைவியின் மரணத்தை கமிசன் போட்டு ஊத்தி மூடியாயிற்று. ஆட்சி அதிகார பலத்தால் தலைவியின் பங்களாவில் நடந்த கொள்ளை,கொலைகள் பற்றிய உண்மைகள் வெளியான போதும் தண்டனையில் இருந்து தப்ப முடிந்தது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீருவான்! எடப்பாடியை எட்டப்பனாக்கிய கொட நாடு கொள்ளை,கொலையில் நடந்த உண்மை என்ன..?

அந்த கொட நாடு எஸ்டேட் பங்களாவில் தான் பல ரகசிய ஆவணங்களை வைத்திருந்தார் ஜெயலலிதா! அந்த ரகசிய ஆவணங்களில் தனக்கு நம்பிக்கையானவர்கள் போல நடித்து தனக்கு துரோகம் இழைத்தவர்களாக கருத்தியவர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களையும், மன்னிப்பு கடிதங்களையும் அவர் ரகசியமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது. ஆகவே, அதை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் எதிர்கால அதிமுக என்ற கட்சியின் லாகானை தன் வசம் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கும் ஒருவர் தான் அதை எடுக்கத் துணிந்திருப்பார்.

அந்த எஸ்டேட்டிற்குள் சென்றவர்கள் – அல்லது அனுப்பப்பட்டவர்கள் – அங்கு நகைகளையோ, பணத்தையோ எடுக்கவில்லை. அதற்கான குறைந்தபட்ச தேடுதல் கூட அவர்களுக்கு இல்லை.

அவர்களை அனுப்பியவர்கள் சொல்லிக் கொடுத்தது போல, அங்குள்ள 99 அறைகளில் சரியாக செல்ல வேண்டிய அறைக்குள் நுழைந்து, எடுக்க வேண்டிய ஆவணங்களை எடுத்தற்கு மேலாக வேறு ஒன்றுமே செய்யவில்லையே! சாதாரண கார் டிரைவர் கனகராஜுக்கும், பேக்கரிக் கடைக்காரர் சயானுக்கும் அந்த ஆவணங்கள் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை.

அவர்கள் நுழையும் போது எப்போதுமே தங்கு தடையில்லாமல் மின்சாரம் உள்ள அந்த இடத்தில் சரியாக மின்தடை ஏற்படுகிறது! 28 சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் செயல் இழக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் வெறிச்சோடிய அந்த பங்களவிற்கு சுமார் ஐம்பது காவல் துறையினரை நிறுத்தி இருந்தார்களே.., அவர்கள் அன்று என்ன ஆனார்கள்? இதை எல்லாம் கொள்ளை அடிக்கச் சென்றவர்களுக்கு சாதகமாக இவ்வளவு துல்லியமாக செய்தவர் யார்? இதை செய்வதற்கான வசதிகளும், அதிகாரப் பின்புலமும் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவையும் தங்களை ஏவியவர்களுக்காக செய்த அந்த எளியவர்கள் அடுத்தடுத்து ஏன் கொல்லப்பட வேண்டும்…?

இந்த கொள்ளைக்கு பிறகு எடப்பாடியின் சகோதரரை பார்த்துச் சென்ற கனகராஜ் சாலை விபத்தில் கொல்லப்படுகிறார். அதே தினம் சயானை கொல்ல நடந்த முயற்சியில் அவர் படுகாயமுடன் தப்பிக்கிறார். அதே சமயம் அவரது மனைவியையும், மகளையும் பறி கொடுக்கிறார். கொட நாடு பங்களாவில் சி.சி.டிவி கேமாராக்களை ஆபரேட் செய்யும் தினேஷ் மர்மமான முறையில் இறக்கிறார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது உடல் கூடக் கிடைக்கவில்லை.

இந்த மகா பாவத்திற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டாமா..?

இந்த குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி சயான் தன் ஆசைக்குரிய மனைவியையும், அன்புக்குரிய மகளையும் இழந்து தனித்துவிடப்பட்ட  நிலையில் தானும் கொல்லப்படலாம் என்ற சூழலில் தான், என்ன நடந்தாலும் சரி உண்மைகளை உலகிற்கு சொல்லிவிடலாம் என தவித்து தேடுகிறார் ஒரு நேர்மையான பத்திரிகை ஆசிரியரை! அவருக்கு தெரிய வருகிறது. தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியரான மாத்யூ சாமுவேல் துணிச்சலானவர். அவரை நம்பி சொன்னால் அதை உலகிற்கே தெரியப்படுத்துவார். நமக்கும் பாதுகாப்பு அளிப்பார் என சென்றார். அந்தப்படியே மாத்யூ சாமுவேலும் பல தடைகளைக் கடந்து. எதிர்ப்புகளை சமாளித்து இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார்.அதற்குப் பிறகும் கூட தமிழக ஊடகங்களோ, அகில இந்திய ஊடகங்களோ இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பது தான் துர் அதிர்ஷடம்!

சாமார்த்தியம், சாதுரியமும் மட்டுமே ஒருவரை தொடர்ந்து காப்பாற்றிவிட முடியாது.

ஆட்சி அதிகார பலத்தாலும்,மத்திய ஆட்சியாளர்களுக்கு செய்த அடிமைச் சேவகம் காரணமாகவும் எடப்பாடி இது நாள் வரை தப்பித்து வந்தார். தன்னிடமுள்ள அபரிதமான பணபலத்தால் எந்த குற்றத்தையும் செய்யலாம் என எடப்பாடி நம்பினார். யானைக்கும் அடி சறுக்கும்.

ஆட்சியில் இருக்கும் போது தன்னை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி யாரும் ,பேசவோ எழுதவோ கூடாது என நீதித் துறையையே கூட தனக்கு சாதகமாக திருப்பினார். அதே நீதித்துறை அவர் விவகாரத்தில் ஆட்சி மாறியதும் காட்சி மாறி இன்று வழிவிட்டு நிற்கிறது. எடப்பாடி, தான் கைது செய்யப்படுவோம் என்றதும் பதறுகிறார். தமிழக மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எல்லாம் துடிக்காத அவர் தனக்கு ஒன்று என்றவுடன் போராட்டத்தில் இறங்குகிறார். ஸ்டாலின் சரியாகத் தான் சொன்னார். மடியில் கனமில்லை எனில் வழியில் பயப்படுவானேன்…?

ஜெயலலிதா வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையில் அடையாளச் சின்னமான கொட நாடு எஸ்டேட்டும், பங்களாவும் அவரது மரணம் போலவே மர்ம பங்களாவாக மாறி நிற்கிறது!

ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைந்த வளம் கொழிக்கும் எஸ்டேட்டும்,அதில் சகல வசதிகளுடன் அரண்மனைகளை விஞ்சும் வண்ணம் எழுப்பட்ட மிகப் பிரம்மாண்ட பங்களாவும் இன்று பயன்படுத்த யாருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. அவருடன் நெருக்கமாகவும், தளபதிகளைப் போலவும் இருந்த ஒருவர் கூட அவருக்கு விசுவாசமாக இல்லை என்பது அவர் மரணத்திற்கு மூன்று நாட்கள் முன்பு – அதாவது அவர் அப்பல்லோவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலைமையில் – இந்த திட்டம் தீட்டப்பட்டு இவர்கள் ஏவப்பட்டதில் இருந்து தெரிய வருகிறது. அந்த காலகட்டத்தில் சசிகலாவின் முழு நம்பிக்கைக்கு உரிய தளபதியாக எடப்பாடி பழனிச்சாமி தான் இருந்தார்.

ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக கொடநாட்டை அணுவணுவாக அறிந்து வைத்திருந்த ஒருவர் உண்டெனில் அது சசிகலா தான். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அங்கு ரெய்டு நடத்தப்பட்ட போது கூட சசிகலாவிடம் தான் அனுமதி வாங்கப்பட்டது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த கொலை,கொள்ளைகள் குறித்து இது வரை ஏன் சசிகலா வாய் திறக்கவில்லை..? ஏன் அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கோபம் வரவில்லை. தானும் தன் உடன் பிறவா சகோதரியுடன் சுற்றித் திரிந்து, சுகித்துக் கிடந்த அந்த சொர்க்கபுரிக்குள் நடந்த எந்த அநீதிகள் பற்றியும் ஏன் சசிகலா வாய் திறக்கவே இல்லை. இதற்கான விடை எடப்பாடிக்கும் தெரியும் தானே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time