கம்யூனிஸத்தை பேசவும், எழுதவும் பலர் உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்டாக வாழ்வது மிகக் கஷ்டமாகும்! ஆனால், காந்தி இயல்பிலேயே கம்யூனிஸ குணாம்சங்களோடு இருந்தார்! அந்தப்படியே தான் அவரது போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் ஆகிய ஆஸ்ரம வாழ்க்கையை ஒரு கம்யூனாக கட்டமைத்து, யாவருக்கும் சமமான வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தார்! இன்னும் எத்தனையெத்தனை விவகாரங்களில் அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்டாக வெளிப்பட்டார் எனப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது!
காந்தியின் கட்டுரைகளும், பேச்சுகளும் தொண்ணூறு தொகுதிகளாக வந்துள்ளன. அரசியல், சமூகம், பன்னாட்டு விவகாரம் என பலவற்றை தொடர்ந்து பேசி, எழுதி வந்திருக்கிறார் காந்தி ! ‘பொது இடத்தில் பலர் மத்தியில் 24 மணிநேரமும் இருப்பவராக இருந்தார்’. காந்தி, உலகம் முழுவதும் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறார். இங்குள்ள ஒவ்வொரு தத்துவங்களோடும் காந்தி ஒப்பிடப்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் ஆர்.பட்டாபிராமன் எழுதியுள்ள ‘தோழர் காந்தி – மகாத்மாவின் சோசலிச உரையாடல்’.
ஆர்.பட்டாபிராமன் ஒரு தொழிற்சங்கவாதி; சோசலிச கண்ணோட்டம் கொண்டவர். ஆனாலும் காந்தியைப் பார்த்து அவர் வியக்கிறார். காந்தியை ‘எழுதிப் பார்த்ததில் எனது குணப்போதாமைகளின் நீள் சுவர்களை காணமுடிந்தது. எனது அதைரியத்தை கண்டறிய முடிந்தது. பேச்சுக்கும், செயலுக்கும் இடையே எப்போதும் நீளும் இடைவெளியை குறைக்க முடியாமையை உணரமுடிந்தது’ என்கிறார். மார்க்சியர்கள், காந்தியோடு ஒத்துப்போக ஏராளமான காரணிகள் உள்ளன என்பதை தத்துவநோக்கில் சொல்லும் ஒரு நூல்தான் தோழர் காந்தி.
காந்தி தான் கடைபிடிக்காத எதையும் சொன்னதில்லை. போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி, சேவாகிராம் போன்ற காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கை முறை ஒருவகைப்பட்ட சோசலிச சிறு சமூக குடியேற்றமாகப் பார்க்கப்படுகிறது. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, வாழ்வூதியம் , கூட்டம் கூடும் உரிமை, பேச்சுரிமை,மத வழிபாட்டுரிமை, சிறுபான்மையினர்களுக்கான உரிமைகள் போன்றவை குறித்த ‘கராச்சி தீர்மானம்’, 1931ல் நேருவும், காந்தியும் இணைந்து உருவாக்கியவை.
காந்தியின் உப்பு யாத்திரையானது 241 மைல்கள் நடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1934 ல் மாவோ தனது long march ஐ நடத்தினார். இப்படி போராட்டங்கள் நடத்துவதை,ஏகாதிபத்தியத்தை மதிப்பிடுவதில், அடிப்படை உரிமைகள் குறித்த அநேக விஷயங்களில் இருதரப்பாரும் உடன்படுவதை காண முடியும்.’ மார்க்சிய வகைப்பட்டு காந்தி வர்க்கப் போராளியல்ல; ஆனால் பாட்டாளிவர்க்க தத்துவத்திற்கு மிக அருகாமையில் நின்று போராடியவர்’ என்று ராஞ்சி கூறியுள்ளார். அதனால்தான் பொதுவுடைமைவாதியான எஸ்.ஏ.டாங்கே தனது மிக இளம் வயதில் அதாவது 21 வது வயதிலேயே காந்தி Vs லெனின் என்ற நூலை எழுதினார் என்கிறார் பட்டாபிராமன்.
இந்த நூலில் 199 பக்கங்களே உள்ளன. ஆனாலும், பல நூறு பக்கங்களின் பிழிவாக இது உள்ளது. பல அறிஞர்களின் வாதங்களைச் சுட்டி எழுதப்பட்டுள்ளது. மார்க்சியர்களும், காந்தியவாதிகளும் இணைந்து பணிபுரிய வேண்டிய இணைப்புப் புள்ளிகளை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த நூலைப் படிக்கும் காந்தியர்கள், மார்க்சியர்களை ஆதரவோடு பார்ப்பார்கள். பெரியாரைப் போல, அம்பேத்கரைப் போல காந்தியையும் மார்க்சியர்கள் இயல்பாக தமது வழிகாட்டியாக கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. ‘காந்தியின் நடைமுறை’ என்ற முதல் அத்தியாயம், காந்தி ஒரு ‘அகிம்சை சார்ந்த கம்யூனிஸ்ட்’ என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசிரியர் பேணுதார் பிரதான் கருதுகோளோடு முடிவடைகிறது. இந்த நூலின் பெரிய கட்டுரை இதுதான். காந்தி ஒரு தோழராகவே வாழ்ந்தார் என்பதை ஆசிரியர் சொல்ல வருகிறார். ‘காந்தி தன் வாழ்நாட்களிலேயே சனாதனவாதி, பழமைவாதி, புரட்சிக்கு எதிரானவர், முதலாளித்துவத்தின் ஊதுகுழல் எனப் பல ஏளனங்களுக்கு உள்ளானவர். ஆனால் அவர் சோசலிசம் என்பதை தான் உணர்ந்த வகையில் அந்த இலட்சியத்திற்கு நடைமுறை வாழ்வில் உண்மையாக இருந்தார்” என்கிறார் நூலாசிரியர்.
வைஸ்ராய் – க்கு எழுதிய கடிதத்தில் உங்களின் மாத ஊதியம் ரூ.21,000, அதாவது தினம் ரூ.700 வீதம் பெறுகிறீர்கள். ஆனால், இங்கிலாந்தின் பிரதமர் தினம் ரூ.180 வீதம் மாதம் ரூ.5400 பெறுகிறார் என எழுதுகிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போனிக்ஸ் பண்ணையில் அனைவருக்கும் சமமான 3 பவுண்டு ஊதியம்தான் வழங்கப்பட்டது. ‘இல்லாதவர்களின் இருப்பிடத்தில் அவர் இருந்தார்.அவர்களைப் போல உடையணிந்தார். அவர்களின் மொழியில் உரையாடினார். அவர் உண்மையாக இருந்தார். மக்கள் அளித்த மகாத்மா என்பது அவரின் உண்மைப் பெயராயிற்று’. ‘
நேரு,நேதாஜி ஆகியவர்களை விலக்கிப் பார்த்தால் இடதுசாரிகளுடன் தோழமையுடன் விவாதிக்கக் கூடியவராக காந்தி மட்டுமே இருந்தார்’ என்கிறார் நூலாசிரியர். மீரத் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு போன்றவைகளில் குண்டு வீசுவது தவறு என்கிற பார்வையை விட்டுவிடாமல் அத் தோழர்கள்பாற் கரிசனத்தைக் காட்டியவராகவே காந்தி இருந்தார். ‘இதை நாம் புரிந்துகொள்ளாமல் ‘miss’செய்துவிடக் கூடாது’ என்கிறார் பட்டாபிராமன்.
காந்தியவாதிகளும், சோசலிசவாதிகளும் அரசை எப்படிப் பார்கிறார்கள் ! காந்தி – லெனின், காந்தி – மாவோ, காந்தியும் அரசும் போன்ற அத்தியாயங்கள் காந்தியர்களும், மார்க்சியர்களும் உடன்படும் மற்றும் முரண்படும் பகுதிகளைச் சொல்லுகிறது. காந்தியைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டவர்களை, சோசலிசம் என்ற கருதுகோள்பால் அக்கறை உள்ளவர்களை இந்த நூல் யோசிக்க வைக்கும். இருசாராரும் உரையாடும் ஆதார நூலாக இதனைக் கொள்ளலாம்.’காந்தியைக் கண்டுணர்தல் ‘ என்ற நூலை பட்டாபிராமன் ஏற்கெனவே எழுதியுள்ளார்; அதனைத் தொடர்ந்து இந்த நூலை பட்டாபிராமன் எழுதியுள்ளார்.
காந்தி கூறும் ஆலோசனைகள், கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்டக் குழு தன் அணிகளுக்கு விடுக்கும் அறைகூவல் போல உள்ளது ” கிராமத்திற்குச் சென்று பணிபுரியுங்கள் என நான் சொல்லுவதை நீங்கள் இன்று கேட்கத் தயார் இல்லாமல் போனால் ஒரு நாள் உங்கள் பிரசங்கங்களை கேட்க யாருமே இல்லாத காலம் வந்து விடும்”.
காந்தி சோசலிசவாதிகளோடு முரண்படும் இடங்ளை, காந்தியின் பொருத்தமான வார்த்தைகள் மூலம் சொல்லுகிறார் ஆசிரியர். “மார்க்சின் முறையைத் தவிர வேறு இல்லை – அது மட்டுமே சிறந்த முறை என்பதை நான் ஏற்கவில்லை” என்று காந்தி சொன்னதாக, அவரது உதவியாளராக இருந்த பியாரிலால் பதிவிட்டுள்ளார். “மார்க்சிற்கு இருந்த கல்வித் திறமை எனக்கு இல்லை. அது இருந்திருக்குமானால் மார்க்ஸ் தத்துவத்தை மார்க்ஸைவிட இன்னும் நன்றாக எழுதியிருப்பேன்” என்று காந்தி, தனது 74 ம் வயதில் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தை படித்துவிட்டு சொன்னதாக அறிகிறோம். ‘பலாத்காரம் இல்லாமல் கம்யூனிசம் வந்தால் தானாக வரட்டுமே’ என்று சொன்னதையும் பார்க்கிறோம். இரண்டாவது உலகப் போரில் ‘ ருஷ்யா தோற்றுவிட்டால்’ உலகில் ஏழைகள் வேறு எவரை நோக்க முடியும்’ என்று கவலைப்பட்ட காந்தியையும் நாம் பார்க்கிறோம். எது பாதை, சர்வோதயா, பல வகை சோசலிசம், காந்தியின் தொழிலாளி என பல தலைப்புகளில் காந்தி இதில் பேசப்படுகிறார்.
Also read
அரசின் பாத்திரம், வன்முறையின் எல்லை, மரண தண்டனை போன்ற எந்த விஷயங்களிலும் காந்தி தன் கருத்தை மறைத்ததே இல்லை.” எவ்வழியில் சோசலிசம் என்பது விவாதத்துக்குரிய ஒன்றாக இருக்கலாம். உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்கு பக்கபலமாக மார்க்சியம் நிற்கும் என்பது தொடர்ந்து சோதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அதே நேரத்தில் சோசலிசக் கட்டுமானம் இந்தியாவில் நடைபெற வேண்டுமெனில், அதற்கு காந்தி மிக நெருக்கமாகவே தேவைப்படுகிறார். பொருளாசை, சொத்தாசை, குறுகிய மனோபாவம், மிருகத்தனம், சுயநலம் என அனைத்தையும் அகற்ற காந்தியம் மிக முக்கிய வழியாகவே தெரிகிறது. மார்க்சியர்கள் தங்களுக்கு மிக நெருக்கமாக கைக்கொள்ள வேண்டிய ஒன்றாகவே காந்தியின் உரையாடல்கள் தொடர்கின்றன” என்று இந்த நூல் முடிகிறது. இதுதான் இந்த நூல் சொல்லும் சேதி.
பக்கங்கள் 199/ விலை ரூ.155/ உவேசா பிரிண்ட்ஸ்/ 9578078500.
மின்னஞ்சல் : [email protected]
நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
மிகச் சரியான நூல், சரியான நேரத்தில். காந்தியும்-மார்க்ஸ் ம் இங்கே இணைந்தாக வேண்டும், இந்தியாவற்கு மட்டுமல்ல உலகிற்கும்.