மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறதா? பதற வேண்டாம், பணம் வேண்டாம்! யார் தயவும் தேவையில்லை! வரமாக வந்த மழையை வறண்டு கிடக்கும் நிலத்தடிக்குள் இதோ இந்த எளிய முறையை பின்பற்றி , அனுப்புங்கள்! வெள்ளத்தில் இருந்து உடனே விடுதலை!
தொடர் மழை தமிழகம் முழுக்க சக்கை போடுபோட்டவண்ணம் உள்ளது! மழைவெள்ளத்தால் தண்ணீர் தேங்கி உள்ளதால் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும், உற்பத்திக் கூடங்களும் தண்ணீரை வெளியேற்ற பகீரதப் பிரயத்தனம் செய்த வண்ணம் உள்ளனர்.முடிந்த வரை அரசு துரிதகதியில் இறங்கி நீரை வெளியேற்றினாலும் பல இடங்களில் அரசு உதவியை எதிர்பார்த்து மக்கள் தவிக்கின்றனர்.
ஆனால், அரசு உதவியை எதிர்பார்க்காமல் எந்த செலவுமில்லாமல் இந்த தண்ணீர் பிரச்சினையில் இருந்து நாமே நம்மை விடுவித்துக் கொள்ளமுடியும். அத்துடன் அந்த தண்ணீரை நம் நிலத்திற்குள்ளேயே விட்டு சேகரித்துக் கொள்ளவும் முடியும் என்பதைத்தான் இந்த காணொளியில் இந்த விவசாயி விளக்கி உள்ளார்.
குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் தங்களிடம் உள்ள போர்பம்பை ரிவர்சில் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் எத்தனை அடி ஆழத்திற்கு போர் போட்டு உள்ளார்களோ, அத்தனை அடி ஆழத்திற்கு இந்த வெள்ளத் தண்ணீரை மின்சார உதவியின்றி உள்ளே அனுப்பிவிடலாம்.
ஆரம்பத்தில் ஓரிரு நிமிடங்கள் மோட்டாரைப் போட்டுத் தண்ணீரை வெளியேற்றிவிட்டு நாம் மோட்டாரை நிறுத்திவிட வேண்டும். அப்போது அந்த தண்ணீர் வெளியேற்றிய குழாய் நிறுத்தப்பட்டவுடன் வேகமாக காற்றை உள்ளுக்கு இழுக்கும். அப்போது அந்தக் குழாயை தேங்கிக் கிடக்கும் தண்ணீருக்குள் சொருக வேண்டும். அவ்வளவு தான் தேங்கியுள்ள தண்ணீர் தானாக பைப்பிற்குள் ஓடி பூமிக்குள் சென்றுவிடும்!
இதில் ஒருவர் செய்ய வேண்டிய சிறிய செலவு ஒன்றே ஒன்று தான்! அது தண்ணீர் தேங்கியுள்ள பகுதி வரை அந்த பிளாஷ்டிக் பைப் வருவதற்கு தக்க நீளத்திற்கு அதை வாங்கி தண்ணீர் வெளியேறும் குழாயின் வாய் பகுதியில் சொருக வேண்டும். அத்துடன் கசடுகள்,குப்பைகள் உள்ளே சென்று அடைத்துக் கொள்ளாது இருக்க ஒரு வடிகட்டியை வாய் பகுதியில் கட்டிவிட வேண்டும். இது மிகவும் முக்கியம். இதன் மூலம் தேங்கியுள்ள தண்ணீரானது ஒரு மணி நேரத்திற்கு 12,000 லிட்டர் வரையிலும் நிலத்திற்குள் சென்றுவிடும். இந்த வீடியோ பதிவை கவனமுடன் பார்த்து உங்கள் சொந்த அனுபவ புரிதலில் களயதார்த்தத்திற்கு ஏற்ப செயல்படுங்கள்! இதன் மூலம் உங்களையும், உங்களை சுற்றி இருப்பவர்களையும் வெள்ள அபாயத்தில் இருந்து விடுவித்து பலன் அடையுங்கள்!
தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் போர்வெல்லை 500 அடி முதல் ஆயிரம் அடி வரை கூட இறக்கி உள்ளார்கள்! அவர்கள் இந்த முறையை பின்பற்றினால் தங்கள் நிலத்தடி நீர்வளத்தை காப்பாற்றிய புண்ணியம் செய்தவர்களாவார்கள். தமிழகம் முழுக்க தற்போது 22 லட்சம் போர்வெல்கள் புழக்கத்தில் உள்ளன! அவை அனைத்தும் களம் கண்டால் ஒரு சில மணி நேரத்திலேயே இந்த மழைவெள்ளச் சூழல்கள் முடிவுக்கு வந்துவிடும்.
இந்த வீடியோ பதிவை வெளியிட்ட விவசாயியின் பெயர் நமக்குத் தெரியவில்லை. அவர் நம்மை தொடர்பு கொண்டால், அவர் பெயரை புகைபடத்துடன் வெளியிட்டு கெளரவிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.
Also read
இந்த செய்தியை பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமையை நான் சொல்லாமலே நீங்கள் செய்வீர்கள் என்பதை நான் அறிவேன்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
கூடிய விரைவில் இதை செயல்படுத்தினால் மக்கள் இந்த ஒரு விடிவு காலம் கிடைக்கும்
மிக்க நன்றி.நல்ல தகவல் அதனுடன் நல்ல தெளிவான காணொளி பதிவு.
அதிக மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் 10 அடியில் இருக்கும் போது இது போன்று தண்ணீரை தாராளமாக உள்ளே அனுப்ப முடியுமா..?
கடல் நீர் மூலமாக உற்பத்தியாகும் மழை பூமியில் பொழிந்து குளம் ஏரி நிறைந்து உபரி நீர் கடலுக்கு செல்லும் வகையில் மழை நீர் போக்குவரத்து நிலத்தடி நீர் சேகரிப்பு அமைய வேண்டும்.
இங்கே நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவதற்காக ஒரு சரியான ஆலோசனை செய்முறையை விளக்கத்தோடு வீடியோவாக உள்ளது.
ஊர் பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த விவசாயி அவரது ஆடியோவில் ‘ஊதுற சங்கை ஊதிட்டேன் பயன்படுத்துகிறவங்க பயன்படுத்திக்ங்க’
என்ற ரீதியில் சொல்லிட்டார்.
இது விவசாய நீர்ப்பாசன துறையோடு பிரச்சனை. விவசாயிகளிடம் உரியவாறு அறிவுரை வழங்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.
ஆசிரியர் அவருடைய அரசியல் செல்வாக்கை வைத்து முதலமைச்சர் பார்வைக்கு இதை கொண்டு சென்று ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். வாழ்த்துகள்!
அனைத்து போர்வெல் பைப்களில் non-return value பொருத்தப்பட்டு இருக்கும். அதை எடுத்தால் மட்டுமே தண்ணீர் போர்வெல் உள்ளே செல்லும்.
தவறு. இந்த முறையில் தண்ணீர் வெளியேற்றுவது ஆறு அங்குலம் போன்ற கேஸிங் பைப்பில் விடுவதால் அதில் NRV கிடையாது.ஆகையால் இது பூமி வறண்டு உள்ளபோது சரியான முறை .
முயற்சி செய்துபார்க்கலாம்.
நாம் வாழும் பூமியை காக்கும் பொறுப்பு நமக்கும் இருக்கு என்பதை தெளிவாக எடுத்து கூறிய சகோதரருக்கு மிக்க நன்றி!
சிறந்த பதிவு இனி வரும் காலங்களில் ஏற்படும் நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்று சொல்லி விளக்க காணொலி மூலம் தெரியபடுத்தியுள்ளார்.
இதனை அரசு கவனத்தில் கொண்டு மேலும் இதனை விவசாய நிலங்களை பாதுகாக்கவும் பேரழிவு வரும போது இதன் மூலம் தண்ணீரை நிலத்தடியில் கொண்டு சென்று பாதுகாக்க சட்டமாக கொண்டு வந்து வருங்கால சந்ததிகளுக்கு நம்மாலான பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
இதை செயல்படுத்தினால் மக்கள் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படும். மழை நீர் பூமியைத் தொடும் வரை தான் அது தூய்மையான நீராக இருக்கும். எக்கணம் அது பூமியைத்தொடுகிறதோ அந்த நொடியே பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை கழிவுகளை தன்னுள் கலந்து அதுவும் அசுத்தமடைகிறது. இது மெல்ல மெல்ல பல அடிகள் கணமுள்ள மண் கண்டத்தின் மூலம் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீருடன் கலக்கிறது. இந்த இயக்கத்தை நாம் எளிமைபடுத்த வேண்டினால் வீட்டு மேற்கூரையில் சேகரமாகும் மழை நீரை முறையாக வடிகட்டி அமைப்பை ஏற்படுத்தி பிறகு பூமிக்குள் செல்லும் வண்ணம் செய்தால் பலனுண்டு. அதைவிடுத்து சாலையில் தேங்கியிருக்கும் நீரை நேரடியாக பூமிக்குள் அனுப்புவது கரோனாவைக்காட்டிலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி. இது போன்ற தவறான பதிவுகளை பகிராதீர் பரப்பாதீர்.
Right is born from wrong ( that farmer also agreed that, it’s the first step to reach perfect step)
விளைநிலங்களில் செயல்படுத்தலாம். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் சாலைகளில் கழிவு நீருடன் தேங்கியிருக்கும் மழைநீரை இம்முறையில் செயல்படுத்துவது ஏற்புடையது அல்ல, என்பதே என் கருத்து.
அன்புடன்
கண்ணன் மீரா
இப்படியே செயல்படுத்த போவதில்லையே இதனை விவசாய ஆராய்சியாளர்கள் அவர்களின் ஆராய்சி மூலம் சீர்படுத்தி செயல் பட வேண்டும் என்பது தான் இந்த காணொலி அனுப்பிய விவசாயியின் வேண்டுதலும்!