வடகிழக்குப் பருவமழை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கடந்த மாதத்தில் மழைப்பொழிவை கொடுத்தது.
ஏறக்குறைய மாநிலத்தில் ஓடும் எல்லா ஆறுகளும் ஏராளமான உபரி நீரை வங்கக் கடலில் கொண்டுபோய் சேர்த்தன. ஆட்சியாளர்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு மேற்கொண்ட மழைநீர் வடிகால் திட்டங்களை இம்மழை அம்பலத்திற்கு கொண்டு வந்தது .அதே சமயத்தில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செய்த உருப்படியான திட்டங்களை இந்த கனமழை காட்டிக்கொடுத்தது. மயிலாப்பூரின் மக்கள் பிரதிநிதியாக இருந்த ஓர் அரசியல் வாதி சாலைகளில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளத்தை இங்குள்ள நான்கு குளங்களுக்கும் செல்லும் வகையில் குழாய்கள் பதித்தும் நிலத்தடி நீராக அவை மாறும் வகையில் தெருவோரங்களில் சிறிய கற்களை பதித்தும் சிறப்பு ஏற்பாடுகளை செய்தார். அதற்கான பலனை இந்த மழை கொடுத்துள்ளது.
திருவள்ளுவர் பிறந்த இடமாக கருதப்படும் மயிலாப்பூர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. நாயன்மார்களின் பாடல்பெற்ற கபாலீஸ்வரர் கோயில் இங்கு உள்ளது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இங்குதான் பிறந்தார்.
நம் முன்னோர் கோயில் குளங்களை கோயில் காரியங்களுடன், நிலத்தடி நீரை பெருக்கவும் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொண்டனர். மயிலாப்பூரில் மட்டும் நான்கு குளங்கள் உருவாயின.
பெரியகுளம் எனப்படும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம், இதன் அருகே சித்திரைக் குளம் எனப்படும் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம், இந்த குளத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அருகருகே விருபாட்சீஸ்வரர் கோயில் குளமும் மாதவப்பெருமாள் கோயில் குளமும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்குளங்களிலேயே கபாலீஸ்வரர் கோயில் குளம் இரண்டாவது பெரிய குளம் ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த குளத்தில் நீர் வற்றாமல் இருந்தது. இக்குளத்தை சுற்றி நான்கு மாட வீதிகளிலும் பிரபல ஓட்டல் நிறுவனங்கள் தங்கள் கிளையை தொடங்கி ஏராளமான நிலத்தடி நீரை எடுக்க தொடங்கிய பிறகு இக் குளத்தில் தண்ணீர் மறையத் தொடங்கியது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை இந்த குளம் காய்ந்துதான் கிடந்தது. இத்தனைக்கும் கடந்த ஆண்டில் ஓரளவு மழைப்பொழிவு இருந்தது.
மழைப் பொழிவு ஏற்படும் சமயத்தில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் இந்த குளங்களில் வந்து விழும் வசதி தொடக்ககாலந் தொட்டு இருந்தது. நாளடைவில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டன.பிளாஸ்டிக் குப்பைகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இவற்றை சரிசெய்து இந்த குளங்களுக்கு அதிக அளவு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் வகையில் குழாய்களை பதிக்கும் பணிகளை மயிலாப்பூரில் 2016-21 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆர் .நட்ராஜ் திறம்பட செய்தார். சோலையப்பன் தெரு, சித்திரை குளம் வடக்கு தெரு உள்ளிட்ட பல தெருக்களில் இதற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.
இதேபோல பெரிய குளத்திற்கு மழை நீரைக் கொண்டு செல்லும் பணிகளை குளத்தைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் செயல்படுத்தினர். மற்ற இரண்டு குளங்களையும் பல முறை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தார்.
இந்தப் பணிகளை அவர் தனி ஆர்வம் செலுத்தி நிறைவேற்றினார்.
மசூதி தெரு,கேசவ பெருமாள் கோயில் மேற்கு தெரு உள்ளிட்ட பல தெருக்களில் நிலத்தடி நீரை சேமிக்கும் திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தினார். வல்லுநர்கள் ஆலோசனையின் பேரில் மழைக்கால வெள்ள நீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறியகற்களை குறிப்பிட்ட உயரத்தில் சாலையோரம் பதிக்கப்பட்டன
வாகனங்கள் மற்றும் நீரோட்டத்தில் இவை பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு வளையங்கள் இவற்றின் மீது பதிக்கப்பட்டன.
இந்த பணிகளுக்கான பலன்கள் தற்போதைய பெரு மழையின் போது கைமேல் கிடைத்தது. கடந்த மாதத்தில் மட்டும் சித்திரைக்குளம் மூன்று முறை நிரம்பி வழிந்தது. இதில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகிலுள்ள தெருக்களில் பாய்ந்தோடின. சமீபத்திய வரலாற்றில் பார்க்காத காட்சியாக இது அமைந்து மயிலாப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
கடந்த 2015ல் இதைவிட மழைப்பொழிவு அதிகம் இருந்தும் கபாலீஸ்வரர் கோயில் குளம் பாதியளவே நிரம்பியது. இப்போது முக்கால்வாசி நிரம்பிஉள்ளது .இதன் மைய மண்டபத்தில் ஒரு படிக்கட்டு அளவே வெளியில் தருகிறது. விருபாக்சீஸ்வரர் கோவில் குளமும் நிரம்பி உபரிநீர் கோவில் கருவறை வரை சென்று விட்டது.
இதன் அருகே உள்ள மாதவப்பெருமாள் கோயில் குளமும் நீண்ட காலத்த்திற்குப் பிறகு இப்போது தண்ணீரை பார்த்துள்ளது.
மயிலாப்பூரில் உள்ள கோவில்குளங்கள் இங்கு உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வற்றி குடிநீர் வாரிய குழாய்களில் நீர் வராத காலங்களில் இக்குளங்களால் சேமித்து வைக்கப்பட்ட நிலத்தடி நீர்தான் மயிலாப்பூர் மக்களின் தாகத்தை தீர்த்து வந்தது .
எனவே, இந்த குளங்களின் தற்போதைய நீர்ப்பெருக்கு மதங்களைக் கடந்து மக்களை கொண்டாட வைத்திருக்கிறது.
மக்கள் தொகை வேகமாகப் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் குளம் ,ஏரி போன்ற புதிய நீராதாரங்களை உருவாக்குவது அரிதினும் அரிதான செயலாக உள்ளது.. சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் ஏரி, புழல், சோழவரம் மற்றும்பூண்டி ஏரிகளை தவிர மேலும் புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்கும் முயற்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு ஈடுபட்டது. அது அண்மையில் தான் நிறைவேறியது.
உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை என்று காலங்கள் ஓடின. தேர்வாய் கண்டிகை – கண்ணங்கோட்டை ஏரி எனப்படும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அந்த புதிய நீர்த்தேக்கம் சோழவரம் ஏரியை விட சிறியது. ஒரு டிஎம்சிக்கும் குறைவாகவே அதில் நீர் சேர்த்து வைக்க முடியும் .
எனவே , வருங்கால நீர் தேவைக்கு இருக்கிற நீர் நிலைகளை பாதுகாத்து பராமரித்தலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் .
குளம் ,ஏரி மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி அதற்கு நீர் வரும் தடைகளை நீக்கி, நீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
இப்பணிகள் சிறப்பாக நடைபெற உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.பொது நலத்துடன் அவர்கள் செயல்பாடு இருந்தால் பொது மக்களுக்கு முழுபலன் கிடைக்கும் என்பதற்கு ஆர். நடராஜின் செயல்பாடு முன்னுதாரணமாக உள்ளது.
Also read
காவல் துறையில் உயர் அதிகாரியாக – சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக, டிஜிபியாக – பணியாற்றி ஓய்வுக்குப் பிறகு, அரசியல்வாதியானவர். அவருடைய சிறப்பான செயல்பாடுகளில் மயிலாப்பூர் குளங்களுக்கு புதிய நீர்வழிப் பாதைகள் அமைத்ததும், பழைய பாதைகளில் இருந்த அடைப்புகளை நீக்கியதும் நிலத்தடி நீர் சேமிப்பு க்காக அவர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் விளம்பரப்படுத்த படாவிட்டாலும், ஒரு காலத்தில் இயற்கை காட்டிக்கொடுத்து விடும் என்பதற்கு தற்போது நிரம்பி வழிந்த மயிலாப்பூரில் குளங்கள் ஒரு சிறந்த சான்று.
-மாயோன்
Almighty India Movement
சர்வசக்தி இந்தியா இயக்கம்
முன்மொழியும்
ஊரமைப்பு நகரமைப்பு
செயல்திட்டம்
பழைய ஊரமைப்பு அல்லது நகரமைப்பை நாம் அவ்வளவு எளிதாக மாற்றி அமைக்க முடியாது.
இருப்பினும் ஆங்காங்கே மக்கள் வசிப்பிடங்கள் இடையே குளங்கள், ஏரிகள் ஏற்கனவே இருக்கக்கூடும். அவைகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி மேடுயர்த்தி சுற்றியுள்ள அனுமதிக்கப்பட்ட கட்டடங்களை தவிர்த்து நீர் நிலைகள் கட்டிடங்களுக்கும் இடையே நல்ல மேடான சாலை வசதிகளை நிர்மாணிக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ளதை மேம்படுத்தலாம்.
அவ்வாறு ஏற்கனவே உள்ள குளம் ஏரிகளை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து, கூரையிலிருந்து பிடிக்கப்படும் மழைநீர் அந்த ஏரி குளங்களை வந்து அடையும் அளவிற்கு தற்போது கட்டுரையில் விவரித்த முன்னாள் டிஜிபி நடராஜன் பின்னர் அரசியல்வாதியான அவர் மயிலாப்பூர் குளத்தைச் சுற்றி மேற்கொண்ட நீர்பிடிப்பு அமைப்பை கருத்தில் கொண்டு அவ்வாறான திட்டத்தை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தலாம். இதனால் மழைநீர் வீணாகாமல், சாலைகளில் தேங்காமல் குளத்திற்கு சென்று சேரும் நிலை ஏற்படும்.
2. நவீன ஊரக நகர அமைப்புகள் சட்டத்தின்படி புதுநகர் அமைப்புகளை அனுமதிக்கும் சமயத்தில் நகரில் ஒரு குறிப்பிட்ட பரப்பளவிற்கு சமுதாய பொது உபயோகத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற விதி நிர்பந்திக்கப் பட்டிருக்கும். ஆனால் அந்த விதியின் படி ஒதுக்கப்பட்ட இடமெல்லாம் பொது புழக்கத்திற்கு இல்லாமல் வேறு உபயோகத்திற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கும். அல்லது வேறு எவராவது ஆக்கிரமித்து வீடு கட்டி குடி இருப்பார்கள். இவ்வாறான இடங்களை கண்டு அவைகளை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் அந்த இடத்தையும் அதை சுற்றியுள்ள உபயோகப்படுத்தாத காலியிடங்களை சேமிப்பாக வைத்துள்ளவர்களகடம் இருந்து கையகப்படுத்தி அங்கே ஒரு மழைநீர்த்தேக்கத்தை உருவாக்கலாம்.
அவ்வாறு உருவாகிய நீர்த்தேக்கத்தில் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் மழைநீரை அக்குளங்களில் சேமிக்கலாம்.
3. அடுத்தபடியாக இனிவரும் காலங்களில் ஊரக நகர அமைப்புகளை அனுமதிக்க சட்டத்தில் ஓர் அமைப்பின் நடுவில் கட்டாயமாக குறிப்பிட்ட பரப்பளவிற்கு ஒரு நீர்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதை சட்டம் ஆகலாம். அதன்படி அங்கே அமையப்பெறும் குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் மழைநீர் குளங்களில் சேமிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
மயிலாப்பூர் குளம், அவ்வாறே திருவாரூர் கமலாலயக் குளம் மேற்குறிப்பிட்ட ஊரக நகர அமைப்புகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதில் ஐயமில்லை அரசு சட்டங்கள் இந்தவகையில் திருத்தப்பட வேண்டும்.
ஊரக நகர அமைப்பு முறை அனுமதிக்கும் பொறியாளர்கள் ஆவடி எச் பி எஃப் வளாகத்தில் உள்ள அர்ஜுன் பார்க் குளம் மற்றும் அதை சுற்றியுள்ள நடைபாதை இவற்றை முன்னுதாரணமாக எடுத்து செயல்படுத்தலாம்.