கார்ப்பரேட் ஊடகங்களும், கதி கலங்கும் நூலகத் துறையும்!

- சாவித்திரி கண்ணன்

நாட்டில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டு அதை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு பத்திரிகை துறைக்கு உள்ளது! ஆனால், சமீபகாலமாக அந்த தவறுகளில் தானும் சம்பந்தப்பட்டு ஆதாயம் அடைகிறது ஊடகத் துறை! அது தான் தற்போதைய நூலகத்திற்கான பத்திரிகைத் தேர்வில் வெளியாகியுள்ளது.

ஒரு நாடு சிறந்ததாக உள்ளதா என்பதன் அடையாளங்களில் ஒன்று, அந்த நாட்டில் நூலகங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதாகும். அந்த வகையில் தமிழகத்தில் நூலகங்கள் பெரும் வீழ்ச்சியை கண்டு வருவது தொடர்பாக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். ஆயினும், அது நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் உள்ளது.

சமீபத்தில் நூலகத் துறையில் தேவையின்றி வாங்கி குவிக்கப்படும் பத்திரிகைகள் தொடர்பாக நமது அறம் இதழில் கவனப்படுத்தி இருந்தோம். மக்கள் சீண்டவும் மறுக்கும் பல பத்திரிகைகளை கமிஷன் கிடைக்கிறது அல்லது ஆளும் தரப்பிற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக வாங்கி அனுப்புகின்றனர். அவற்றின் போஸ்டல் உறை கூட கிழிக்கப்படாமல் உள்ளன! இந்த வகையில் மக்கள் வரிப் பணம் வீணாகிறது என விரிவாக எழுதி இருந்தோம்.

சீரழிவின் உச்சம் தொட்டுள்ள தமிழ் நாடு நூலகத்துறை சீர் பெறுமா?

அதன் எதிரொலியாக இதழ்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கமிட்டி போட்டனர். அந்த கமிட்டியால் தேர்ந்தெடுக்கப் பட்டவைகளை பரிசீலித்தால், மீண்டும் அதே தவறுகள் வெவ்வேறு வகைகளில் தொடர்வது தான் வேதனையானது. ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், முன்பு வந்து கொண்டிருந்த சாதி சார்ந்த பத்திரிகைகள் தொடங்கி பல மோசமான நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் தடுக்கப்பட்டுள்ளமையாகும்!

பல  நல்ல பத்திரிகைகளுக்கு, நல்ல சிற்றிதழ்களுக்கு குறிப்பாக நல்ல தரமான இலக்கிய இதழ்கள், சமூக நோக்குள்ள இதழ்களுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளார்கள் என்ற வகையில் பாராட்டலாம்! பெண்கள், குழந்தைகள், அறிவியல்,தொழில் நுட்பம்,சமயம் தொடர்பானவற்றை பெரிய அளவு குறை சொல்ல முடியாது. அதே சமயம் பொருளாதாரம் எனும் தலைப்பின் கீழ் விவசாய இதழ்களையும், நம்மகுலசாமி என்ற இதழையும் கொண்டு வந்துள்ளது பொருத்தமற்றது. விவசாயம், கிராமத் தொழில்கள் என தனியாக வகைப்படுத்தி இருக்க வேண்டும். அதே போல தொழில் வணிக இதழ்கள் என தனித் தலைப்பின் கீழ் பத்திரிகைகளை வகைப்படுத்தி இருக்க வேண்டும்.

பொது தலைப்பின் கீழ் தேர்வான இதழ்களில் தான் படு குழப்பங்கள்! அதற்குள் ஜீனியர் விகடனும் வருகிறது, மோட்டார் விகடனும் வருகிறது. உயிர் சூழல் என்ற பறவைகள், விலங்குகள் சுற்றுச் சூழல் சார்பானவையும் வருகிறது, மார்க்சிஸ்ட், பெரியார் முழக்கம், சிந்தனையாளன் போன்றவை எல்லாம் கூட வருகிறது. இது தான் இருப்பதிலேயே படு அபத்தம். ஒரு பத்திரிகையின் பேசு பொருள் என்ன என்ற அடிப்படை புரிதல் கூட இல்லை. தலைப்பு வாரியாக எப்படி வகைப்படுத்தலாம் என்று கூட தெரியாமலா இருப்பார்கள்?

பொதுவாக மக்கள் நூலகத்திற்கு எந்த அரசியல் கட்சி பேப்பர்களையும், இதழ்களையும் வாங்கக் கூடாது என முடிவு எடுக்க வேண்டும். திராவிட மற்றும் இடதுசாரி இதழ்கள் கணிசமான அளவில் தூக்கலாக இடம் பெற்றுள்ளதை தவிர்த்திருக்கலாம்! ஏனெனில், இதை சாக்கிட்டு, நாளை பாஜக, ஆர்.எஸ்.எஸ் பத்திரிகைகளும் நூலகத்திற்குள் நுழையும் ஆபத்துள்ளதே! அதே சமயம், காந்தி என்ற குழந்தைகள் இதழைத் தவிர காந்தியப் பத்திரிகைகள் எதுவும் இடம் பெறவில்லை.

இந்த இதழ்கள் தேர்வில் படுகுப்பையான பெயர் தெரியாத பல பத்திரிகைகள் ஆர்டர்களை பெற்றுள்ளதும், அதில் நின்று இரண்டாண்டுகள் கடந்த பல பத்திரிகைகளுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளதும், இதில் ஊழல்களும், வேண்டப்பட்டவர்களுக்கு அத்துமீறி சலுகை செய்யப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.

முதலாவதாக இந்தக் குழுவில் உள்ள ஒரு சிலர் எந்த ஒரு மெனக்கிடலையும் செய்யாமல் ஏற்கனவே அதிகாரிகள், அரசியல்வாதிகள் தீர்மானித்திருந்த சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டதோடு, தங்கள் பங்கிற்கு சில தகுதியற்ற பத்திரிகைகளுக்கு ஆர்டர் கிடைக்க துணை போயுள்ளனர். பல நல்ல பத்திரிகைகளை புரட்டிக் கூட பார்க்காமல் நிராகரித்துள்ளனர் என்றால், நம்மை யார் கேட்டுவிட முடியும் என்ற இறுமாப்பின்றி வேறில்லை!

அது மட்டுமில்லை, சும்மா சாணிப் பேப்பரில் இரண்டு, மூன்று பாரத்திற்கு கடனே என எதையாவது நிரப்பி ஒருகலர் அட்டை போட்டுவிட்டு 20 அல்லது 25 ரூபாய் விலை வைக்க வேண்டிய இதழுக்கு 40 முதல் 50 வரை போட்டு நூலகத் துறைக்கு மாத்திரமே அச்சிடக் கூடிய சில பத்திரிகைகளுக்கு எந்த கேள்வியுமில்லாமல் எப்படி ஆர்டர் தரப்பட்டது? பழைய அதே கேடி ஆசாமிகளே மீண்டும் நூலக ஆர்டர்களை வேறு பத்திரிகை மற்றும் வேறு நபர்கள் பெயரில் பெற்றுக் கொள்ள முடிந்தது எப்படி? ஊடக உரிமையாளர்கள் பெயரிலான இரண்டு டுபாக்கூர் சங்க நிர்வாகிகளும், அவர்கள் சம்பந்தப்பட்ட இதழ்களும் மீண்டும் ஆர்டர்கள் வாங்கிவிட்டனர். அவை சரியான பத்திரிகைகள் என்றால் கூட ஏற்கலாம்! இவர்கள் தான் நூலகத்துறையில் தலைமை தொடங்கி மாவட்ட வாரியாக உள்ள டி.எல்.ஒக்கள் வரை ‘பல்க் பேமெண்ட்’ என்று சொல்லி கையில் திணித்து, கையூட்டு கொடுத்து கறைபடுத்தியவர்கள்! இது சங்கங்களின் பெயரிலான ஒரு கார்ப்படேட் அணுகுமுறை!

விகடன் குழுமத்தில் இருந்து வரும் ஆனந்த விகடன், ஜீனியர் விகடன்,சக்தி விகடன், நாணய விகடன், அவள் விகடன், பசுமை விகடன், விகடன் இயர்புக் போன்ற இதழ்களுக்கு ஆர்டர்கள் போட்டது போதாது என்று அந்த குழுமத்தில் இரண்டாண்டுகள் முன்பாக நிறுத்தப்பட்டுவிட்ட சுட்டி விகடன், டாக்டர் விகடன் போன்ற இதழ்களுக்கு ஆர்டர் தரப்பட்டு உள்ளது. ஒரு இதழுக்கு ஆர்டர் தருவதற்கான அடிப்படை விதிகளில் ஒன்று அது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாக கடைசி மூன்று மாதங்கள் வெளி வந்த இதழ்களை விண்ணப்பிக்கும் போதே சமர்பிக்க வேண்டும். அப்படி இருக்க, எப்படி இந்த இதழ்கள் தேர்வுக்கு உள்ளாயின?

இவை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதை போல அந்த நிர்வாகம் டம்மி காப்பி தயார் செய்து தந்திருக்க வேண்டும். இப்படியாக எல்லோருக்கும் தெரிய நின்று போன பத்திரிகையை இப்படி டம்மி கொடுத்து பித்தலாட்டம் செய்து வாங்குவது ஒரு பாரம்பரிய பத்திரிகை நிறுவனத்திற்கு அழகா? அப்படி அவர்கள் செய்து தந்தாலும், ”இது தவறு, அடுத்த ஆண்டு விண்ணப்பம் செய்யுங்கள்”  என சொல்லி இருக்க வேண்டாமா? அதுவும், தவிர ஒரே நிறுவனத்தில் இருந்து வெளி வரும் பத்து பத்திரிகைகளுக்கு ஆர்டர் தருவது நியாயம் அல்லவே! பலருக்கும் பகிர்ந்து தருவது தானே முறை! ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இதன் மூலம் பல கோடி ரூபாய் பெறுமான ஆர்டர்களை அள்ளிச் செல்வது எப்படி சரியாகும்?

இது போல காப்பரேட்மயமான சில பெரு நிறுவனங்களின் நூலக ஆதிக்கம் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது! மேலும் ஆர்.என்.ஐ ( இந்திய பத்திரிகை பதிவாளர் சான்றிதழ்) நம்பர் கூட வாங்கியிராத சில நபர்கள் ஆர்டர்கள் எப்படிப் பெற முடிந்தது? அரசாங்க அனுமதி இல்லாத பத்திரிகைகளுக்கு இப்படி எல்லாம் ஆர்டர் தருவதற்கும், அதை நிர்பந்தித்து பெறுவதற்கும் இவர்களுக்கெல்லாம் கூச்ச நாச்சமே இல்லையா? இது சட்ட விரோதம்!

குழந்தைகளுக்கான 11 இதழ்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நின்று போன சுட்டி விகடனுக்கும், கல்கி குழுமத்தின் கோகுலத்திற்கும் ஆர்டர் தந்தேயாக வேண்டிய கட்டாயம் தான் என்ன? மருத்துவம் உடல் நலன் தொடர்பாக ஏழு இதழ்கள் தேர்வாகியுள்ள நிலையில் நின்று போன டாக்டர் விகடனுக்கு ஆர்டர் போடுவானேன்? அறிவியல் தொழில் நுட்பம் தொழில் சார்ந்த ஏராளமான பத்திரிகைகள் தேர்வாகியுள்ள நிலையில் 75 ரூபாய்க்கான மோட்டார் விகடன் எதற்கு ? இந்த வாய்ப்புகளை தொடர்ந்து சிறப்பாக வெளிவரக் கூடிய வேறு சிறு இதழ்களுக்கு தந்திருக்கலாமே?

ஒரே ஒரு பத்திரிகையை முழு சிரத்தையோடு கொண்டு வந்து கொண்டிருக்க கூடிய பல சிறு நிறுவனங்கள் – அதுவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு வருபவை – முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளன! நின்று போன பத்திரிகைகளுக்கு ஆர்டர் வாங்கித் தான் பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் விகடனோ மற்ற பிரபல நிறுவனங்களோ இல்லை! ஆனால், பல சிறு நிறுவனங்களுக்கு நூலக ஆர்டர் ஒரு மிகப் பெரிய சப்போர்ட்டாகும்! ஆனால், பெரிய ஆங்கில பத்திரிகை நிறுவனங்கள் அதிக வாய்ப்பை பெற்றுள்ளன!  90க்கு மேற்பட்ட ஆங்கில இதழ்கள் ஆர்டர் வாங்கியுள்ளன! கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு இதுவும் ஒரு சான்றாகும்!

விகடன் குழுமத்திற்கு மட்டும் இந்த பேவரிடிஷம் நடக்கவில்லை. சுமார் ஒரு டஜன் பத்திரிகைகள் எப்பவோ நின்று போன நிலையில் ஆர்டர் வாங்கியுள்ளன! ஆக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதா? அறிவுத் துறையில் இருப்பவர்களே இவ்வளவு மோசமாக நடந்து கொண்டால், இந்த நாட்டிற்கு விடிவு ஏது? பத்திரிகையாளர்களாக இருப்பவர்கள் சிறிய சந்தர்ப்பம் வாய்த்தால் கூட, ஊழல் அரசியல்வாதி களையும், ஊழல் அதிகாரிகளையும் மிஞ்சிவிடுவார்கள் என்றால், சொல்வதற்கே வார்த்தையில்லை. வருத்தமே மிஞ்சுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time