இது, சீனாவை சிதைப்பதற்கான கூட்டணியா?

-ச.அருணாசலம்

உலக அரங்கில் அமெரிக்க ஆதிக்கத்தை வலுப்படுத்தவும்,எழுச்சி பெற்று வரும் சீனப் பொருளாதாரத்தை சிதைக்கவும் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தோ பசிபிக் பொருளாதார அமைப்பு என்ற கூட்டணியால் இந்தியா பெறப் போகும் பலன் என்ன? பாதகம் என்ன? என ஒரு அலசல்!

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அரசும் அதன் அதிபர் ஜோ பைடனும் ஏற்படுத்த இருக்கும் இந்தோ பசிபிக் பொருளாதார அமைப்பு -Indo Pacific Economic Framework- என்ற கட்டமைப்பில் இந்தியாவும் இணையும் என்று நமது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பத்து தினங்களுக்கு முன்பு கடந்த மே 1-2 தேதிகளில் ஜெர்மனி சென்ற மோடி “உலகின் பசிப்பிணியை போக்க இந்தியா உதவும் , பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கோதுமை போன்ற உணவு தானியங்களை இந்தியா அளிக்கும் ” என்று அடித்துக் கூறினார் ; ஆனால் நடந்தது என்ன? அறிவித்த சில நாட்களில்பல ஆயிரம் டன் கோதுமை ஏற்றுமதிக்காக துறைமுகங்களை அடைந்த நிலையில் நமது பிரதமர் மோடி  “கோதுமை ஏற்றுமதிக்கு தடை” என்று தடாலடி  அறிவிப்பு செய்தார்.

2012 முதல் எட்டு ஆண்டுகளாக ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,  தென் கொரியா, சீனா, போன்ற 15 ஆசிய பசிபிக் பிரதேச நாடுகள் மற்றும் ஏசியான்  இந்தியா உட்பட பத்து நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக பிராந்திய பொருளாதார கூட்டுறவு திட்டமான – Regional Comprehensive Economic  Partnership-  என்ற கூட்டுறவு ஒப்பந்தம்  2020 ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள்  37வது ஆசியான் உச்சி மாநாட்டில் கையெழுத்தாகி உயிர் பெற்றது.

உறுப்பினர் நாடுகளுக்கிடையே பொருள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தில் வரிச்சுமைகளை-கஸ்டம்ஸ் என்றழைக்கப்படும் சுங்க  வரிச்சுமைகளை களைந்து நியாயமான நடைமுறைகளை ஏற்படுத்தவும், வளர்ச்சி குன்றிய ஆசிய நாடுகளுக்கு சலுகைகளும் , முன்னுரிமையும் அளிப்பதும் இந்த கூட்டுறவு உடன்படிக்கையின் முக்கிய கூறுகள் என்பதை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஒத்துக்கொண்டு அதை மேம்படுத்த தமது பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்தியாவும் இந்த பேச்சுவார்த்தைகளில் உற்சாகமாக பங்கெடுத்ததை அனைவரும் அறிவர்.

2019ம் ஆண்டுவரை உற்சாகமாக இருந்த இந்திய அரசு இறுதிக்கட்டத்தில்  இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாமல் விலகி நின்றது. அதற்கு காரணங்கள் !  -இந்திய சந்தையில் மலிவான வெளிநாட்டு பொருட்கள் வந்து குவியும் , இதனால் இந்திய தொழில்கள் நசிந்து போகும், உற்பத்தி கூடங்கள் வருவிழந்து வேலை வாய்ப்புகள் குறைந்து விடும். இந்திய விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் திண்டாடுவர் நமது பொருளாதாரமே பாதுகாப்பின்றி நசிந்து விடும் என்பன போன்ற காரணங்கள் முன் வைக்கப்பட்டன.

மோடியோ, ”நாட்டை சீர்குலைக்கும் ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட மாட்டேன்” என்று அவரது பாணியில் அறிவித்தார் . ஜப்பான் , இந்தோநேசியா சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் வருகைக்காக “கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன. வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்று கூறினர்.

இவ்வமைப்பு மிகப்பெரிய சந்தைக்கூடமாக பரஸ்பர நல்லுணர்வு கொண்ட பொருளாதார பிராந்தியமாக, உலகின் மூன்றில் ஒரு பங்கு வாழும் மக்களை உள்ளடக்கியதாக,  ஆசிய பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு பெரிதும் வலு சேர்க்கின்ற அமைப்பாக மாறிய பொழுது, இந்தியா தன்னை இதனுடன் இணைத்துக் கொள்ள மறுத்தது.

மேக் இன் இந்தியா முயற்சியின் விளைவாக இந்திய தொழில்துறையும், உற்பத்தி நிறுவனங்களும் அடைந்த கதி ஊரறிந்த ரகசியம். அதற்குப் பின் ஆத்மநிர்பர பாரத்முயற்சி மூலம் நமது பொருளுற்பத்தி துறையும், தொழில்துறையும் சுருங்கியுள்ளதா அல்லது விரிவடைந்துள்ளதா என்பதற்கு ஆராய்ச்சி தேவையில்லை.

இன்று தவறான கொள்கைளினால் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிந்து வருவதும், பொதுத்துறையில் நவரத்தினங்கள் என புகழப்பட்ட நிறுவனங்கள் விலை பேசப்படுவதும்  அதானிகளும், அம்பானிகளும் வயிறு வீங்குவதும் நடைபெறும் இந்த தருணத்தில் இந்தோ பசிபிக் பொருளாதார அமைப்பு என்ற அமைப்பில் இந்தியாவும் கலந்து கொள்ளும் என்று மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராந்திய வளர்ச்சி, தங்குதடையற்ற வணிகம், சுங்கவரி சுமைகள் குறைந்த ஏற்றுமதி, இறக்குமதி, அரசியல் கலப்பின்றி பரஸ்பர நல்லுணரவுடன் பொருளாதார வணிகம், ராணுவக்கூட்டு மறுப்பு போன்ற தெளிவான கொள்கைகள் கொண்டது ஆர் சி இ பி. அந்த அமைப்பில் சீனா உலகின் மிகப்பெரிய வர்த்தகத்தை தன்னகத்தே கொண்டிருப்பதால் பெரும்பங்கு வகிக்கிறது, சீனா ஒரு போதும் ஆர் சி இ பி அமைப்பை தன் கட்டுக்குள்ளோ தனது அதிகாரத்தின் கீழோ வைத்திருக்கவில்லை. அவ்வாறு சீனமே பிரதானம் என்றிருந்தால் ஜப்பானும், ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும், தென் கொரியாவும் ஏனைய நாடுகளும் அவ்வமைப்பில் இடம் பெற்றிருக்க மாட்டாது.

ஆக, ஆர் சி இ பி சீனம் சார்ந்த அமைப்பு என்ற வாதம் கவைக்குதவாது. ”ஐ பி இ எப்  இந்தோபசிபிக் பொருளாதார கட்டமைப்பு ஒரு தங்குதடையற்ற வாணிக ஒப்பந்தமல்ல”என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

அப்படியானால் இந்த பொருளாதார கட்டமைப்பின் கூறுகள் என்ன? நோக்கம் தான் என்ன?

அமெரிக்க அரசின் வணிகத்துறை செயலாளர் திருமதி.ஜினா ராய்மன்டோ கூறுகையில்,  ”சீனாவில் முதலீடு செய்யும் தொழில்களை திசைதிருப்பி இந்த ஐ பி இ எப் அமைப்பிற்குள் இழுப்பதே எங்கள் நோக்கம் அவ்வாறு வருபவரகள் அமெரிக்க தொழில்களுக்கு நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்” என்று கூறியுள்ளார் . அவர் உண்மையில் வெளிப்படையாக இது சீனாவுக்கெதிரான அமைப்பு என்கிறார்.

இவ்வமைப்பில் இணைவதன் மூலம் ஒரு நாடு அடையும் நன்மை என்ன?

ட்ரேட் இன்சைட்டிவ் என்றழைக்கப்படும் வணிக வரி மற்றும் தீர்வை விலக்குகள் மற்றும் சலுகைகள் ஏதும் கிடையாது என்ற நிலையில் ஏற்றுமதி கோட்டாக்களினால் அடையும் சொற்ப லாபங்கள் தவிர வேறு நன்மைகளை உறுப்பினர் நாடுகள் எதிர்பார்க்க முடியாது.

தொழில்நுட்பத்தில் மேலும் மற்ற ஒப்பந்தங்களினால் அமெரிக்காவை நம்பியுள்ள நாடுகள் வேறுவழியின்றி அமெரிக்காவின் அரசியல் மற்றும் ஆதிக்க நோக்கத்தை ஆதரிக்க வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

சட்டங்களும் தரக்கட்டுப்பாடுகளும் (Rules and Standards)

ஆசிய பசிபிக் நாடுகளின் தொலைதொடர்பு மற்றும் பரிமாற்ற துறைகளில் சீனா பெருமளவு தொழில்நுட்பம் வழங்கிவரும் நிலையில் அதை முறியடித்து அதிக விலையுள்ள அமெரிக்க தொழில் நுட்பத்தை திணிக்கவே இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளினால் அமெரிக்காவிற்கு பரந்துபட்ட தளங்களும், கொழுத்த லாபமும் கிடைக்கலாம் , ஆனால் உடன் பங்கு பெறும் நாடுகள் அடையும் நன்மை என்ன என்பது பெரிய கேள்விக்குறி. ஏனெனில், மற்ற நாடுகள் சலுகைகள் பெறுகின்றன என தெரிய வந்தால் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் ரத்தாகும்! அமெரிக்கா அத்தகைய ஒப்பந்தங்களில் இருந்து பின்வாங்கும்.

அமெரிக்காவின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் கீழ் நோக்கி செல்வதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

உக்ரைன் ரஷிய போரின் பேரால் தொடரப்பட்ட ரஷ்யா மீதான பொருளாதார தடை இன்று ரஷ்யா மட்டுமின்றி, ஆசியா லத்தீன் அமெரிக்க நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளையும் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. சமாதானத்திற்கான முயற்சி எதையும் முன்னெடுக்காததால் உலகில் எரிவாயு சக்தி நெருக்கடி மட்டுமின்றி, உணவு நெருக்கடியும் பூதாகரமாக தோன்றியுள்ளது.

பிடிக்காத நாடுகளை ஒதுக்கி ஒழிப்பது என்ற கான்சல் கலாச்சாரத்தின் ஆதார சுருதியாக அமெரிக்கா திகழ்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சக வாழ்வு என்பதைவிட(தான் கூறும்) ஒரேஒழுங்கு  முறை என்பதையே அமெரிக்கா முன்வைக்கிறது. இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பு என்பது அமெரிக்க நலன்களை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நலன்களை முன்னிறுத்தும் இந்த ஒப்பந்தம், சீனாவை ஒதுக்கி வைத்து, அவர்களிடமுள்ள AI  மற்றும் 5G  தொழில்நுட்பத்தை முடக்குவதன் மூலம் அமெரிக்க தொழில்நுடப முறையை உலகெங்கிலும் புகுத்தி ஒரே தொழில்நுட்ப ஆதிக்கத்துள் கொண்டுவருவதே. அதற்காக சீனத்தில் இருந்து முதலீடுகளை ஈர்த்து திசை திருப்பி மற்ற ஆசிய பசிபிக் நாடுகளில் முதலீடு செய்ய அனுமதிப்பது அதற்கான பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவது அமெரிக்க நலன்களுக்கு உகந்தது. அதற்காகவே இந்த அமைப்பு என்பதுதான்.

ஆனால், இந்த வலைப்பின்னலில் இந்தியா இணைவதால் யாருக்கு லாபம்? நம்மிடையே இருக்கும் பிணக்குகளை தீர்க்க நாம்தான் தீர்க்க முயல வேண்டும் அதைவிடுத்து நமது சுதந்திரத்தை நாம் அடகு வைக்க முயல்வது சாலச்சிறந்ததுமில்லை, தொலைநோக்கு கொண்டதுமில்லை.

விஸ்வ குரு என்று தம்பட்டமடித்துக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் வரும் நாற்றாண்டு ஆசியாவின் நாற்றாண்டாக அமைந்தால் வருந்துவரோ? ஆசியாவின் இரு பெரும் நாகரீகங்களான சீனமும், பாரதமும் இணைந்து முன்னேறுவதில் நட்டம் நமக்குண்டோ?

சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல் களபத்திரிக்கையாளர்களின் குரல் வளையை நெறிப்பது போன்ற மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு அமெரிக்க பொதுவெளியிலும் ஐ. நா வளாகத்திலும் கண்டனத்துக்குள்ளாகும் மோடி அரசு அதன் உக்கிரத்தை தணிக்க  அமெரிக்க அரசுடன் ஒத்துப் போக முயல்கிறதா?

ஆராய்ந்து எடுத்த முடிவா அல்லது வழக்கம்போல அரைவேக்காட்டு அறிவிப்பா?

பொறுத்திருந்து கவனிப்போம்.

கட்டுரையாளர்;ச.அருணாசலம் 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time