தமிழகத்திலும் மாட்டிறைச்சிக்கு இத்தனை தடைகளா..?

-சாவித்திரி கண்ணன்

மாட்டிறைச்சி விற்பனைக்கான மத்திய அரசின் தடையை  தமிழகத்திலும் அமல்படுத்திட பல நெருக்கடிகள் தரப்படுகின்றன. சிலரது தூண்டுதலால் தமிழகத்தின் மிகப் பெரிய சந்தையிலேயே மாட்டிறைச்சி விற்பனைக் கூடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. சில நகராட்சிகளில் மாட்டிறைச்சி விற்போர் மிரட்டப்பட்டு, சிறையில் தள்ளப்படுகின்றனர்!

தமிழகத்தின் மிகப் பெரிய சந்தைகளில் முக்கியமானது ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையாகும். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி என நான்கு மாவட்டங்களை இணைக்கும் இடம் இது என்பதால், நான்கு மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருவர்! மக்கள் கூட்டம் நிறைந்து வழியும். சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பில் நடக்கும் இந்த சந்தையில் புதன் கிழமை கால்நடை சந்தையும், வியாழக் கிழமைகளில் பொதுச் சந்தையும் நடக்கிறது.

விவசாயத்திற்கு தேவைப்படும் விதை நெல், நடவுக்கு தேவைப்படும் வெங்காயம், சிறுதானிய விதைகள்பருப்பு வகைகள், சிறுதானியங்கள், விதவிதமான நாட்டு காய்கறிகள்,  பலவகை கீரைகள், ஏராளமான பழ வகைகள், மூங்கில் கூடைகள், விசிறிகள், பதமடைப் பாய்கள் தொடங்கி ஆடு, மாடு, கோழி என யாவும் கிடைக்கும். இந்த மாட்டுச் சந்தையில் எல்லாவித மாடுகளும் கிடைக்கும். மொத்ததில் இங்கு கிடைக்காதவையே இல்லை என சொல்லலாம். கிராமப் பொருளாதாரத்தின் உயிர் நாடியாகத் திகழ்பவை இது போன்ற வாரச் சந்தைகள் தாம்!


இப்படியாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த சந்தையில் அதிரடியாக ஒரு அநீதி நடந்தேறியுள்ளது. யாரும் எதிர்பாராதவிதமாக சென்ற ஆண்டு நவம்பர் 22 ந்தேதி அதிரடியாக புல்டோசர் வைத்து அங்கிருந்த மாட்டிறைச்சி கடைகள் மட்டும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இடித்ததது இந்துத்துவ தீவிரவாதிகள் அல்ல! நகராட்சி நிர்வாகம் தான்! இப்படி இடிப்பதற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட 13 கடைகளுக்கும் ஒரு நோட்டீஸ் கூட வழங்கவில்லை.

இது குறித்து அதிர்ந்து போன இந்தக் கடைகளை நடத்தும் எளிய அருந்ததியின மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டதில் நீங்க முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது!

அதாவது, ஐம்பதாண்டுகளுக்கு பிறகு தான் இவர்கள் லைசென்ஸ் பெறாமல் நடத்தி வருவதை கண்டறிந்துள்ளதாம் நிர்வாகம். இந்த சந்தையில் சுமார் 400 கடைகள் உள்ளன. இவற்றில் எத்தனை கடைகளுக்கு லைசென்ஸ் இருக்கிறது என ஆராய்ந்தால் கோழி இறைச்சி கடை, ஆட்டிறைச்சி கடை என நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள்! ஆனால், அப்படி ஒரு முயற்சியே நடக்கவில்லை. மாட்டிறைச்சி கடை கூடாது என்பது மட்டுமே ஒரு நோக்கமாக இருந்துள்ளது என இந்த ஊர் மக்கள் வருத்தப்படுகிறார்கள்!

இங்கு மாட்டிறைச்சி சாப்பிடும் மக்கள் கணிசமாக உள்ளனர். எங்களது உணவு உண்ணும் உரிமையும் அப்ப ட்டமாக தட்டி பறிக்கப்பட்டு உள்ளது என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், இஸ்லாமிய மக்களும் அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் லைசென்ஸை முறைப்படுத்தி ஏற்கனவே தொழில் செய்தவர்களுக்கு கடையை மீண்டும் அதே இடத்தில் உருவாக்கித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வருக்கும் புகார்கள் அனுப்பி உள்ளனராம்.

இந்த பிரச்சினை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறது. கடந்த ஐந்து மாதகாலமாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பையும் சந்தித்து பேசி, ஒரு அமைதியான தீர்வுக்கு சி.பிஎம் முயன்றுள்ளது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியதோடு, தொலைபேசியிலும் பேசியுள்ளார். எனினும் சிறிதளவும் இதில் முன்னேற்றம் நடக்கவில்லை. மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லாவும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

சமீபத்தில் ஏப்ரல் 11 ந்தேதி அந்தப் பகுதியில் மீண்டும் அந்தததியினர் கடைகளை நடத்தும் முயற்ச்சியை ஒரு பேரணி போல நடத்தியது சி.பி.எம். ஆனால், காவல்துறை தடுத்துவிட்டது.

இந்த நகராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி. ஆனாலும், இந்த நகராட்சியின் துணைத் தலைவராக உள்ள சிதம்பரம் என்ற திமுகவின் நகர்ச் செயலாளர் தான் அனைத்து அதிகாரத்திலும் கொடி கட்டிப் பறக்கிறார். நகராட்சித் தலைவரான அருந்ததி இனத்தை சேர்ந்த தலைவரால் தன் சொந்த மக்களின் பாதுகாப்பையே உறுதிபடுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ளார். திமுக பிரமுகர் என்றாலும் சிதம்பரம் அவர்களுக்கு வலதுசாரி முக்கியஸ்தர்களோடு தான் நெருங்கிய தொடர்பு என்கிறார்கள்! அவர்களின் ஆலோசனையில் தான் மாட்டிறைச்சி கடைகள் தரைமட்டமாகியுள்ளன என்பது ஊர் மக்களின் பேச்சாக உள்ளது. பெரியார் மண்ணிலே அதுவும் திமுகவினரைக் கொண்டே மாட்டிறைச்சி தடை ஏற்படுகிறது என்பது தான் அதிர்ச்சியாகவும், ஆற்றொண்ணா வேதனையாகவும் உள்ளது.

இது திராவிட மாடல் ஆட்சி என சொல்லப்படுவதால், ‘முதல்வரிடம் முறையிட்டால் நியாயம் பெறலாம்’ என எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளுமே பயனளிக்கவில்லை. திமுகவின் தோழமை கட்சிகள் சிலவும் இது தொடர்பாக முறையிட்டுப் பார்த்தும் ஒரு சிறிய முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.

சி.பி.எம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் என எல்லா இடதுசாரி அமைப்புகளும் களம் கண்டுவிட்டன! சி.பி.எம் தலைவர் பெ.சண்முகம் அவர்களிடம் பேசிய போது, ”இந்த பிரச்சினையில் யார், யார் எல்லாம் தலையிட்டால், இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பினோமோ அவர்கள் அனைவரையும் அணுகி அமைதி வழியில் தீர்வுக்கு முயன்றோம். முதல்வர் வரை பிரச்சினையை கொண்டு சென்றும் தீர்வு பிறக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு காரணமான திமுகவின்  நகரத் தலைவர் சிதம்பரமே சாதிய பாரபட்சத்தோடு நடந்து கொள்கிறார். அவரை பதவி நீக்கம் செய்தால் தான் இந்த ஆட்சி மீது எளிய மக்களுக்கு நம்பிக்கை  ஏற்படும். அருந்ததிய மக்கள் வாயில்லா பூச்சிகள் தானே என நினைக்க்கிறார்களோ, என்னவோ ஆனால், கம்யூனிஸ்டுகள் இறுதி வரை களத்தில் நின்று அவர்களுக்கு வாழ்வாதார உரிமைகளை வாங்கித் தராமல் ஓயமாட்டோம்’’ என்றார்.

புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் இடித்து தரைமட்டமாக்கட்ட மாட்டிறைச்சி கூடாரங்களை பார்வையிடும் பெ.சண்முகம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் அடுத்த மாதமே திருப்பூர் அவினாசி அருகே கானாம்பூரில் உள்ள ஒரு இறைச்சி கடைக்கு சென்று வட்டாட்சியர் ஒருவர், ‘மாட்டிறைச்சி விற்கக் கூடாது’ என மிரட்டிய சம்பவம் நடந்தது.

திருப்பத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாட்டிறைச்சி கடை வைத்திருப்போரை தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு அலைக்கழிப்பதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர் ஒருவரிடம் பேசிய போது, ”தமிழகத்தின் முக்கிய சந்தைகளில் மாட்டிறைச்சிடை இனி விற்கவிட மாட்டோம். இது எங்கள் முதல் கட்ட வெற்றி. அடுத்தடுத்து வெகு சீக்கிரம் எங்கள் நோக்கம் முழுமை அடைவதை தமிழகம் பார்க்கத் தான் போகிறது” என்றார். திராவிட மாடல் ஆட்சியில் இது எப்படி சாத்தியம்? தலை சுற்றுகிறது. என்ன தான் நடக்கிறது இங்கே? ஒன்னுமே புரியலை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time