கோவிஷீல்டால் ஏற்பட்ட கடும் பின் விளைவுகள்!

-Dr. கோ. பிரேமா MD(Hom)

கொரானாவில் மரணித்தவர்களை விட அதற்கான தடுப்பூசிகளால் இறந்தவர்களும், கடும் பக்கவிளைவுகளை பார்த்தவர்களுமாக உலககெங்கும் செய்திகள்! இனி, மனித இனம் கொரோனா தடுப்பூசிக்கு முன், கொரோனா தடுப்பூசிக்கு பின் என்பதாக இருக்கப் போகிறது. கோவிஷீல்டு பாதிப்புகள் அதிர வைக்கின்றன..!

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயப்படுத்தி போடப்பட்ட பின் பல இளவயது திடீர் மரணங்கள், மாரடைப்பு, பக்கவாதம் என பல பக்க விளைவுகளை உலகம் முழுமையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்தச் சுழலில் இடியென வந்திருக்கிறது, கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான இரத்த உறைதலை ஏற்படுத்துவதோடு, மிக மோசமான மரண விளைவுகளை கொண்டுள்ளது என்ற செய்தி!

போதுமான ஆய்வுகள் செய்யாமல், அவசரகதியில் மக்களுக்கு செலுத்தப்பட்ட கோவிஷீல்டால் பல்வேறு பாதிப்புகளையும், மரணத்தையும் சந்திக்க நேர்ந்தது தொடர்பான பல வழக்குகள் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து நீதிமன்றத்தில் 70 நபர்களுக்கும் மேல் தொடுத்த வெவ்வேறு வழக்குகளை ஒன்றாக்கி, பல மாதங்களாக அங்கு விசாரணை நடந்த போது, இதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸ்பர்டு-ஆஸ்டிராஜென்கா தடுப்பூசி நிறுவனம்  முதலில் பொறுப்பேற்க மறுத்து வந்தது.

ஜேமி ஸ்காட் என்பவர் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ரத்த உறைதல் உருவாகி, மூளை பாதிப்பு ஏற்பட்டு, தற்போது அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலையில் உள்ளதாக வழக்கு போட்டுள்ளார். பிரிட்டனின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தனிநபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தடுப்பூசி “குறைபாடுள்ளது” ‘’பாதுகாப்பற்றது’’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், தொடர்ந்து இந்த தடுப்பூசி பாதகத்தினை விளக்கும் பல்வேறு அறிவியல் ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ள நிலையில், இது நீதிமன்றத்தில் நெருக்கடியை தர, அந் நிறுவனம் ஒருவழியாக அதன் தடுப்பூசியின் இத் தீவிர பாதகத்தினை அங்கீகரித்தது.

அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியானது இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையுடன் கூடிய, த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) உடன் த்ரோம்போசிஸை ஏற்படுத்தும் என்பதை வேறு வழியின்றி அந்த நிறுவனமே நீதிமன்றதில் ஒப்புக் கொண்டுள்ளது.

இதைத் தொடந்து கோவிஷீல்ட் தடுப்பூசியின் “பக்க விளைவுகள்” குறித்து ஆய்வு செய்வதற்கு  நமது இந்தியாவில் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்கக் கோரி விஷால் திவாரி என்பவரால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், இன்னும் பல தகவல்கள் வரலாம்.

கொரோனா தடுப்பூசியின் அறிவியல் தன்மையை, அதன் சாதக பாதகங்களை தொடர்ந்து கேள்வி எழுப்பிய என்னைப் போல பலருக்கு  இத்தகவல் புதிது இல்லை எனினும், நம் நாட்டில் இப்போது தான் ஊடகக் கவனம் பெற்றதால் நிறைய பேருக்கு இது புதிய அதிர்ச்சி தரும் தகவலே.

இதில் இந்தியாவில் அதிக சலனத்தை ஏற்படுத்த காரணம். இந்நிறுவன தயாரிப்பான தடுப்பூசி ஃபார்முலாவைத்தான் இந்தியாவின் தடுப்பூசி பெரு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் பெற்று கோவிஷுல்டு என்ற பெயரில் இந்திய அரசுக்கும் மற்ற நாடுகளுக்கும் விற்று வந்ததிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் 175கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன என்கிறது அரசு புள்ளி விபரங்கள். இந்தியாவில் போடப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி கோவேக்ஸின் ஆகும். இவை இரண்டும் வெவ்வேறு தொழில்நுட்பத்தில் வந்தவை.

கிட்டத்தட்ட 90% இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி போட்டவர்களில் 90% கோவிஷீல்டு தான் போட்டுள்ளனர்.

2021 தொடக்கத்திலேயே பல ஐரோப்பிய நாடுகள் இந்த தடுப்பூசியினால் இரத்த உறைதல் மற்றும் அது சார்ந்த மரண பாதகங்களை தொடர்ந்து இந்த தடுப்பூசியை நிறுத்திவிட்டன‌. இங்கிலாந்தும் இதை அவர்கள் நாட்டில் இதை பரிந்துரையில் அதிகாரப்பூர்வமாக அப்போதே நிறுத்தி விட்டது. அப்போதே இந்தியாவிலும் சில தடுப்பூசி மரணங்கள் நிகழ்ந்தன.

கொரானா தடுப்பூசி போட்டதால் 2021 ஆம் ஆண்டு மரணித்த இரு இளம் பெண்கள் காருண்யா, ரித்திகா.

தடுப்பூசிக்கு பிறகு பல இளவயதினர், ஆரேக்கியமாக இருந்தவர்கள்,  கட்டுக் கோப்பான இளைஞர்கள் உட்பட திடீர் என மயங்கி சரிவதும், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் என ஏற்படுவதும் தடுப்பூசி தான் காரணமா..? என்ற ஐயத்தை இச் செய்தி உறுதி செய்துள்ளது‌.

ஆயினும், இந்தியா இதை தொடர்ந்தது ஏன்? 175 கோடி டோஸ்கள் போட்ட இந்தியர்களின் கேள்வி இது தான்.

சீரம் இன்ஸ்டிடியூட் என்ற பெயரை கொரோனா காலத்தில் நாம் அடிக்கடி கேட்டிருந்தாலும் மிகச் சமீபத்தில் தேர்தல் களத்திலும் இப்பெயர் அடிப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம். ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு தேர்தல் நன்கொடையாக இந்நிறுவனம் மட்டும் 52 கோடிகளைக் கொடுத்துள்ளதானது ஆளும் ஒன்றிய அரசின் மீதான நம்பகத் தன்மை சிதைத்துவிட்டது.

இதை இத்தனை நாட்கள் மறைத்தது ஏன்? இத்தடுப்பூசி பின் விளைவால் இது வரை நடந்த இனிமேலும் நடக்கவுள்ள உயிரிழப்புகள், தீரா நோய்கள், இவற்றுக்கு யார் பொறுப்பு ஏற்க உள்ளார்கள்? அந் நிறுவனமா? அரசா ? ஒன்றிய அரசா ? மாநில அரசா?

முதலில் இந்த பக்க விளைவு பற்றிய இதுவரை கிடைத்துள்ள அறிவியல் விளக்கங்களை பார்ப்போம்.

ஏப்ரல் 9 2021 NEJM என்ற மருத்துவ அறிவியல் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது‌. அதில் அடினோவைரஸ் வெக்டர் தடுப்பூசி தொழில்நுட்பத்தில் வந்துள்ள ஆஸ்டிராஜென்கா (கோவிஷீல்டு) தடுப்பூசி எவ்வாறு அந்தடுப்பூசி போட்டவர்களுக்கு Immune Thrombotic Thrombocytopenia எனும் இரத்த உறைதல் மற்றும் தட்டை அணுக்களை குறையும் தன்மையை ஏற்படுத்துகிறது என்னும் உடலியல் மாற்றத்தை தெளிவாக விளக்கியது. இதுவே இத் தடுப்புசியின் பாதகம் பற்றிய முதல் எச்சரிக்கை மணியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து Acquired Immune  Thrombotic Thrombocytopenia பற்றிய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

மார்ச் 2021ல் தொடங்கி டென்மார்க்,  ஆஸ்திரியா, எஸ்டோனியா, லித்தூனியா போன்ற சில ஐரோப்பிய நாடுகள் இத் தடுப்பூசியை தத்தமது நாடுகளில் வாங்குவதை முற்றிலும் நிறுத்தி விட்டன. இதற்கு இத் தடுப்புசி போட்ட பின்னர் ஒருசிலருக்கு இரத்த உறைதலால் மாரடைப்பு மற்றும் மூச்சுக் கோளாறு, மூளையில் இரத்த உறைதல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது நீதிமன்றங்கள் தலையிட்டு பேசுவது தடுப்பூசியால் மரணம் சம்பவித்த குடும்பங்களுக்கு ஆறுதலாக உள்ளது.

2022 இறுதியில் இந்நிறுவனத்தின் இருப்பிடமான இங்கிலாந்தும் இத்தடுப்பூசியை கைவிட்டு, இதன் பாதகங்களை மட்டும் தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கைகளை இன்று வரை மேற் கொண்டு வருகிறது.

ஆயினும் இந்தியா இதை தொடர்ந்து வாங்கி தமது மக்களுக்கு இலவசமாக கொடுத்து வந்தது.

மருத்துவ அறிவியல் மற்றும் தடுப்பூசி அறிவியல் அறிவியலாளர்கள் பலர் ஆரம்பத்திலேயே கொரோனா அவசர தடுப்பூசிகளை அதன் தொழில்நுட்பத்தை கேள்வி எழுப்பினர். அதில் mRNA தடுப்பூசி தொழில்நுட்பம் மிகவும் புதிது . இதை முறையாக ஆராயாமல் அவசரப்பட வேண்டாம் என எச்சரித்தனர். இது இந்தியாவில் அனுமதி இல்லை எனினும் இத்தடுப்பூசி பாதகங்களும் வளர்ந்த நாடுகளில் பெறும் சர்ச்சையையும், இழப்பீடு வழக்குகளும் என போராட்டமாகவே இருக்கிறது.
அடினோவைரஸ் வெக்டர் தொழில்நுட்ப தடுப்பூசியான ஆஸ்டிராஜென்கா கோவிஷீல்டு தடுப்பூசி சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த தொழில்நுட்பம் ஆயினும், இது பரவலாக உபயோகிக்கவில்லை. ஏனெனில், இந்த தொழில்நுட்ப தடுப்பூசிகளில் இரத்த உறைதல் தட்டை அணுக்கள் குறைதல் போன்ற மரண பாதகம் இருப்பதை மறக்கவேண்டாம்  என எச்சரித்தனர்.

புதிய வைரஸான கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தின் விஷத் தன்மை இயற்கையாக தொற்றும் போதும், செயற்கையாக தடுப்புசி வழியாக செலுத்தும் போதும் ஏற்படும் பின் விளைவுகளில் பெரிய மாற்றம் இல்லை என்று 2023 இறுதியில் வெளிவந்த பல ஆய்வுகள் சொல்லியது. இத்தன்மை தடுப்பூசி போட்டவரின் இரத்தத்தில் பல மாதங்களுக்கு பின்னும் இருக்கிறது என்பதை இந்த ஆய்வுகள் எச்சரிக்கை செய்கின்றன. Long COVID என்ற நாட்பட்ட கோவிட்  தொற்று ஏற்பட்ட வெகு சிலருக்கு ஏற்படுவதை போல, தடுப்பூசி போட்டவர்களிலும் சிலருக்கு ஏற்பட்டு நோயாளிகளாக்கி விடும் ஆபத்தை சுட்டிக் காண்பிக்கின்றன.

இப்படி அறிவியல் ஆய்வுகள் வெளி வரும் முன்னரே உலகெங்கும் கொரோனா தடுப்பூசி எந்தவித அறிவியல் உத்திரவாதமும் இன்றி, அவசர கதியில்  திணிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை. இது மானுடப் படுகொலைக்கு ஒப்பானது.

இத்தனைக்கு பிறகும் நம்மூர் மருத்துவர்கள் பலர் இப்போதும் தடுப்பூசிக்கு கண்மூடித்தனமான ஆதரவு தருவது வேடிக்கையாக இருக்கிறது. நான் மருத்துவம் படித்திருக்கிறேன். நான் பேசுவது மட்டுமே அறிவியல். அறிவியல் பேச எனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்ற போக்கில் சில மருத்துவர்கள் தொடர்ந்து பேசுவது அவர்களது அகங்காரம் மற்றும் அறியாமையின் சாட்சியாக இருக்கிறது. இது எவ்வகையிலும் நம் மக்களுக்கு உதவும் போக்கல்ல.

தடுப்பூசியால் மட்டுமே நம் அனைவரும் உயிர் பிழைத்து வாழ்கின்றோம், இல்லையேல் மனித குலமே அளித்திருக்கும் என்று கேட்பவர் சிரிக்கும் வண்ணம் கூசாமல் பொய்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இவர்களில் அலோபதி மருத்துவர்கள் தான் என்றெல்லாம் இல்லை. ஆய்ரவேத, ஓமியோபதி, சித்தா மருத்துவர்களும் இப்படி கண்மூடித்தனமாக இருக்கிறார்கள் என்பதை கொரோனா வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

அதுபோலவே, தடுப்பூசி மீது கேள்வி எழுப்புவது என்பது அலோபதிக்கு எதிரான மனோபாவம் அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இதே கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயமாக திணிப்பது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்  பிரசாந்த் பூஷன் மூலம் பொதுநல வழக்கு நடத்திய மருத்துவர் ஜேக்கப் புலியல் ஒரு அலோபதி மருத்துவர் மட்டுமல்ல, இந்திய அரசின் தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை கூட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நம்மூர் மருத்துவர்கள் கட்டமைக்கும் பொய்களை பார்ப்போம்.

சில லட்சம் நபர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த பாதகம் ஏற்படும். ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை என்கிறார்கள்.

ஆனால், ஆய்வுகள் சொல்வதோ, ஒரு லட்ச டோஸ்களில் ஒரு மரணம் நிச்சயம். மற்றும் ஆயிரம் டோஸ்களில் இரண்டு  பேர் நிரந்தர நோயாளிகளாவர் என்கிறது.

மேலும், தடுப்பூசியால் ஏற்படும் பாதகம் என்பது 28-42 நாட்களுக்குள் வரும். அதற்கு பின் வராது என்கிறார்கள்! இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? பல ஆண்டுகள் தொடர் ஆய்வில் வந்த முடிவா? இல்லை. உண்மையில் சில ஆய்வுகள் இரண்டு மாதங்கள் வரை தடுப்பூசி போட்டவர் இரத்தத்தில் பிரச்சினை இருப்பதை உறுதிபடுத்துகிறது.  சில ஆய்வுகள் 6 மாதங்கள் வரை பாதிப்பு இருப்பது தெரியவருவதாகச் சொல்கின்றன‌ . இதுவே, அதிக காலகட்டத்திற்கு ஆய்வுகளை தொடர்ந்தால் மேலும் தெளிவான பதில்கள் கிடைக்கும் .

கொரோனா தடுப்பூசி போட்ட எத்தனை நபர்களில், எத்தனை பேருக்கு பாதகங்கள் வருகிறது என்பதை ஆராய என்ன மாதிரியான ஆய்வுகள் நடந்தன? சில ஆயிரம் நபர்களை வைத்து, சில நாட்கள் மட்டுமே நடந்த ஆய்வுகள், எப்படி முழுமையான அறிவியல் ஆதாரமாகும் ?

ஒரு லட்சம் டோஸுல் ஒருவருக்கு மரணம் என்பதை எத்தனை லட்ச டோஸ் போட்ட பின்னர் உறுதி செய்ய முடியும் ? ஆறு மாதம், ஓராண்டு, அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பின் இந்த பாதகம் ஏற்படுகிறது அல்லது ஏற்படாது என்பதை உறுதி செய்ய முதலில் அத்தனை காலம் ஆய்வு தொடரவேண்டும் அல்லவா ? அப்படி ஏதும் கொரோனா தடுப்பூசியில் நடந்ததா ?

இதற்கு ஒரு உதாரணத்தை என்னால் சொல்லமுடியும்‌ . 1938ல் கர்ப்பக் கலைப்பை தடுக்கும் மருந்து ஒன்று DES அமெரிக்காவில் பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்த மருந்து எடுத்த பெண்களின் அந்த கர்ப்பத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்த பின் பல்வேறு புற்றுநோய் வருவதை 34 ஆண்டுகள் கழித்து பல ஆதாரங்களோடு தெரிய வரும்போது இம்மருந்தை 1971ல் தடை செய்கிறது அமெரிக்க அரசு.

ஒரு தலைமுறையை தாண்டியும் ஏற்படும் பாதகங்கள் மருத்துவ வரலாற்றில் இருந்தும் , மிகச் சொர்ப்பமான நபர்களிடம் ,மிக மிக குறுகிய கால ஆய்வுகளை வைத்து இத்தனை நாட்களுக்கு பிறகு ஒன்றும் செய்யாது என இவர்கள் தடுப்பூசிக்கு கண்மூடித்தனமான சாக்கு சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனம் ?

இரத்த உறைதல் என்பது இருதயத்திலா?, நுரையீரலிலா?, மூளையிலா?, இரத்த நாளங்களிலா..? இப்படி எங்கு ஏற்படுகிறது என்பதை பொறுத்து நிரந்தர நோயாளியாகவோ, குறுகிய கால நோயாளியாகவோ அல்லது மரணத்திற்கோ காரணமாகும்என்பது கண்கூடு.

அரிதிலும் அரிதாகவே இருந்தாலும், பாதிக்கப்படும் பரிதாபத்திற்குரிய நபர் யாராக முடிகிறது என்பதை எவர் தீர்மானிப்பது ? அரசா? மருத்துவர்களா? இல்லை, தனக்கு பாதகம் வரலாம் என்று தெரிந்து தடுப்பூசியை ஏற்கவேண்டிய அந்நபரா?  அவரது குடும்பமா ? தடுப்பூசி போடும் முன்னர் இவற்றை அறிந்து புரிந்து விரும்பி போட்டிருந்தால் தானே அது சரி?

ஆனால், நடந்தது என்ன?

எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், தனிநபரின் உரிமையை மறுத்து பணியிடங்களில், கல்விக் கூடங்களில், வீட்டுக்கு வெளியே நடமாடக்கூட விடாமல் மக்களை மிகுந்த நெருக்கடியில் தள்ளி, தடுப்பூசியை திணித்தது அறம் ஆகுமா ?

ஜனவரி 2022ல் BMJ எனும் மருத்துவ அறிவியல் இதழில் ஒரு கட்டுரை வந்தது. அது கொரோனா தடுப்பூசி இந்திய மருத்துவர்களின் தடுப்பூசி சார்ந்த அறிவு போதாமையை எப்படி காட்டிவிட்டது என்று விரிவாக பேசப்பட்டது.

இங்கிலாந்தில் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ் போடப்பட்டதில் 300-700 பாதகங்கள் பற்றிய புகார்கள் மக்களிடம் இருந்து வந்த நிலையில், இந்தியாவில் ஒரு லட்சம் டோஸிற்கு வெறும் நான்கு புகார் மட்டுமே பதிவாகியுள்ளது!  இந்த பெரிய இடைவெளிக்கு காரணம், இந்திய மருத்துவர்கள் தடுப்பூசி பாதகங்களை மூடி மறைப்பதும், அவற்றை முறையாக பதிவு செய்யத் தவறுவதுமே!

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளிலும் அதன் பாதகங்களை பதிவு செய்வதில் இந்திய மருத்துவர்கள் மிகுந்த அலட்சியத்தோடு தான் உள்ளனர்.

எனில், இதுநாள் வரை குழந்தைகளுக்கான தடுப்பூசி மரணங்களிலும் பாதகங்களிலும் எவ்வளவு குளறுபடிகள், எவ்வளவு அலட்சியம் நடந்திருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வராமலே போய்விடுகிறது.

இந்தியாவில் இதுவரை நடந்த எந்த தடுப்பூசி மரணத்திற்கும் -தடுப்பூசி பாதிப்பிற்கும் முறையான இழப்பீடு கிடைத்ததில்லை. 3-4 வழக்குகளில் மட்டுமே, குழந்தைகளை இழந்த, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி மரணங்களுக்கும் இதே அலட்சிய போக்கு தொடர்ந்தால் ஆச்சரியம் இல்லை. 2022 ஆகஸ்டு மாதத்தில் கேரள உயர்நீதிமன்றம் கொரோனா மரணத்திற்கு தக்க இழப்பீடு தரும் திட்டங்களை அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் கூறியிருந்தது. அந்த வழக்கில் மரணித்த இளம் பெண்ணின் மரணமும், கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர்  இரத்த உறைதல் காரணமாக மூளை பாதிப்பால் ஏற்பட்ட மரணமே.

இப்படி வெளியிலே தெரிந்த அங்கீகரிக்கப்பட்ட மரணங்கள் வெகுசில. தெரியாத அங்கீகரிக்கபடாத, அலட்சியப்படுத்தப்பட்ட, மறுக்கப்பட்ட மரணங்கள் எத்தனை என்பதை மூன்று ஆண்டுகள் கடந்த விட்ட நிலையில் இங்கு சொல்வதற்கு என்ன ஆதாரம் இனி இருக்கிறது ?

அதுவரை ஆரோக்கியமாக இருந்த இளவயதினர் முதல் வயோதிகர் வரை திடீரென மயங்கி சரிந்து விழுந்து சாவது என்பது தினம் தினம் செய்தியாக வரும் போதெல்லாம் அவற்றை திசை திருப்பி, அவங்க சாப்பிட்ட பரோட்டாவையும், முள்ளங்கியையும் காரணம் காட்டியதை என்னென்பது?

சரி. 90% மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டாச்சு. இப்போது என்ன செய்ய?

அலோபதியோ? ஆயுர்வேதமோ ? சித்தாவோ? அல்லது உங்கள் ஓமியோபதியில் ஏதேனும் தீர்வு இருக்கிறதா ? தடுப்பூசி  பின் விளைவுளை திருப்ப முடியுமா ?

இல்லை. அது சாத்தியம் இல்லை.

மிக எளிதாக தடுப்பூசி பாதகங்களை சரிபடுத்த முடியும் என்றால் ஏன் என்னை போன்ற இவ்வளவு மருத்துவர்கள்  தடுப்பூசி திணிப்பை எதிர்க்க வேண்டும் ? இந்தப் பக்கம் தடுப்பூசி போட்டு விட்டு அந்தப் பக்கம் பாதகங்கள் வாராமல் இருக்க மருந்துகளோ, ஆரோக்கியமான வாழ்வியல் முறையோ போதுமென இருந்து விடலாமே ?

இத்தனை வழக்குகள், இத்தனை போராட்டங்கள் , தொடர் விழிப்புணர்வு என இத்தனை கவனமாக இத்தனை களச்செயல்பாடுகள் தேவையில்லையே?

ஆதலால் தடுப்பூசி பாதகங்களால் உங்களுக்கு ஏதேனும் நோய் குறிகள் தென்பட்டால், அந்நோய்க்கு ஏற்ப அதற்கான முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஜனவரி 2021 லேயே பிரதம மந்திரி மோடி , கொரோனா தடுப்பூசி போட்ட பின் பாதகங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பேற்று தக்க இழப்பீடு தருவது பற்றிய திட்டம் எதுவும் இந்திய அரசிடம் இல்லை. ஏனெனில் இது நீங்கள் உங்கள் சுயவிருப்பத்தின் பேரில் தான் தடுப்புசி  போட்டுக்கொள்கிறீர்கள், ஆதலால் இழப்பீடு பற்றிய அப்படி ஒரு சிந்தனையும் இல்லை, அரசு பொறுப்பேற்காது’’ என்று அப்போதே என சொல்லிவிட்டார். மேலும் காப்பீடும் கிடையாது. எனவே நாம் விழித்துக் கொண்டு தற்காத்துக் கொள்வது ஒன்றே தீர்வு.

கட்டுரையாளர்; பிரேமா கோபால கிருஷ்ணன்

ஹோமியோபதி மருத்துவர்,

மக்கள் நல மருத்துவத்தில் உறுதிப்பாடுள்ளவர்.

mail id [email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time