மகிழ்ச்சி, வெள்ளை அறிக்கையின் மூலம் ஒரு விவாதத்தை, விழிப்புணர்வை விதைத்தற்கு! பி.டி.ஆர்.தியாகராஜனின் வெளிப்படைத் தன்மைக்கு ஒரு சல்யூட்! ஐயோ..இவ்வளவு கடனா..? இவ்வளவு நெருக்கடிகளா..என வியக்கும் போது, இந்த விபரீதங்களுக்கு வித்திட்டது யார்..? அதிமுக மட்டுமே அத்தனைக்கும் பொறுப்பாகுமா..?
ஒரு வகையில் வெள்ளை அறிக்கை மூலம் தன்னை வெளிப்படைத் தன்மைக்கு இந்த அரசு தயார்படுத்திக் கொண்டுள்ளது என்ற வகையில் மகிழ்ச்சியே! சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சொல்வதன் மூலம் தாங்களும் அதே பாதையில் பயணிக்க நேர்ந்தால் கேள்விக்கு உள்ளோவோம் என இவர்கள் உணர்ந்திருப்பார்கள் தானே!
தமிழக நிதிஅமைச்சர் தியாகராஜன் பேசிய விதமும், ஊடகங்களை எதிர்கொண்ட விதமும் உண்மையிலேயே மகிழ்ச்சியளித்தன. ஒரு அரசியல்வாதிக்கேயான சூது,வாது இல்லாமல் அக்கறையுள்ள நிதி அமைச்சர் – நிர்வாகி – என்ற வகையில் சிறப்பாகப் பேசினார்.
நிதி அமைச்சர் தியாகராஜன் கூறிய எதுவும் நமக்கு புதிய செய்தியல்ல. கடந்த பல ஆண்டுகளாக அரசுகள் மீண்டும், மீண்டும் கடன் வாங்குவது குறித்த அபாயங்களை தொடர்ந்து எழுதி வருகிறேன்.
வெள்ளை அறிக்கை தொடர்பாக ஏராளமான புள்ளிவிபரங்கள் வெளியாகிவிட்டன.
ஆகவே அவற்றை இங்கே மீண்டும் பட்டியலிட தேவையில்லை.
உலகிலேயே அதிக கடன்களை வாங்கி குவித்துள்ள நாடாக இந்தியா உள்ளது! இந்தியாவின் இன்றைய கடன் 110 லட்சம் கோடியை கடந்துள்ளது என்றால், தமிழகத்தின் கடன் ஐந்து லட்சத்து 70 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமுமே இன்றைக்கு கடன்கார மாநிலமாகத் தான் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி ஊழலில் உச்சத்தை தொட்டது! ஊதாரித்தனத்தில் கொடி கட்டிப் பறந்தது! கடன்களை பொறுப்பில்லாமல் வாங்கிக் குவித்தனர். முதலீட்டிற்காக என்று கடன் வாங்கிய நிலை கடந்து சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்கவே கடன் வாங்கியதும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே கடன் வாங்கி சமாளித்ததும் தெரியாத ஒன்றல்ல! தமிழகம் இவ்வளவு மோசமான நிதி நிலையில் உள்ளது ஏற்கனவே ஆண்ட கட்சியாகவும், எதிர்கட்சியாகவுமான திமுகவிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. என்னைப் போன்ற பத்திரிகையாளர்களே இதை கவனப்படுத்தியுள்ளோம்.
அப்படி இருக்க தமிழகத்தின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கும் இலவச அறிவிப்புகளை ஏன் செய்ய வேண்டும்…? ஏற்கனவே விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் சக்கரை உள்ளிட்ட பொருள்களை ரேஷனில் தருவதற்கு ஐயாயிரத்து சொச்சம் கோடி செலவாகி வரும் நிலையில் ரேஷன் கார்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாகத் தருவோம் என்ற வாக்குறுதியை தமிழகம் தாங்காது என்பதை உணரவில்லையே!
போக்குவரத்துதுறையில் ஏற்கனவே படு நஷ்டம்! உழைக்கும் தொழிலாளிகளுக்கு உரிய ஊதிய உயர்வு தர முடியவில்லை, அவர்களிடம் பிடித்தம் ஓய்வூதிய பணம் 7,000 கோடியை திருப்பித் தரமுடியவில்லை. அப்படியிருக்க பெண்களுக்கு இலவச பேருந்து பயண அறிவிப்பு!
பால்வளத்துறையில் ஆவினைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்கும் தனியார் பால் விற்பனையே 84% சந்தையை பிடித்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலைக்கு தரப்படும் பாலின் விலையை மேலும் குறைப்பானேன்..? பால் விவசாயிக்கு பாலுக்கு உரிய விலையை கொடுக்காமல் வயிற்றில் அடித்து தானே விலை குறைப்பை நிலை நிறுத்த முடியும்..!
இலவசம், விலை குறைப்பு என்ற தூண்டிலை போட்டு மக்கள் ஓட்டை கபளீகரம் செய்யும் அரசியல் தந்திரங்களால் மக்களில் ஒரு பகுதியினர் கடுமையாக பாதிக்கப்படுவதை குறித்து அரசும் சிந்திப்பதில்லை. மக்களும் சிந்திப்பதில்லை.
ஆக, இந்த வெள்ளை அறிக்கை என்பது வரப் போகிற பட்ஜெட்டில் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள் என்ற எச்சரிக்கை தரவும், போகப்போக சொத்துவரி குடிநீர் வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றை அதிகரிப்பதை நியாயப்படுத்தவும் உதவலாம்!
ஆனால், அதிமுக ஆட்சியை போல நாங்கள் மேலும் கடனை வாங்கமாட்டோம். ஊதாரிதனமான செலவுகளை தவிர்ப்போம், சிக்கனமாக செலவு செய்வோம், நேர்மையான நிர்வாகம் தருவோம் என்ற உறுதி மொழியை திமுக ஆட்சி எடுத்தால் தான் தீர்வு.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த வரிவருவாய் 33% குறைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கவலைக்குரியது. அத்துடன் பெட்ரோல் டீசலுக்கு தமிழகத்தில் இருந்து வசுலிக்கப்படும் வரியான 3,89,000 கோடியில், தமிழகத்திற்கு வெறும் 837 கோடி தான் தரப்படுகிறது என்பது மிகப் பெரிய அநீதியாகும்! மாநில அரசுகளை சுரண்டும் ஒரு எஜமானனாக மத்திய அரசு நடப்பது முடிவுக்கு வர அனைத்து மாநில அரசுகளும் குரல் கொடுக்க வேண்டும்.
கடைசியாக ஒன்று; காந்தியப் பொருளாதரத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று கடன் வாங்காமல் உள் நாட்டு வளங்களையும், மக்களையும் நம்பி இயங்குதல்!
1996 -2001 வரை தமிழகம் வாங்கிய கடன் 34,540 கோடி!
2001 -2006 வரை வாங்கிய கடன் 63,848 கோடி!
2006 -2011 வரை வாங்கிய கடன் 1,14000 கோடி!
2011 -2021 வரை வாங்கிய கடன் 5,70,189 கோடி!
ஆக, இரு கட்சிகளுமே கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்கியதால் தான் இன்று ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63,976 கோடி ரூபாய் கடன் உள்ளது! எங்களை கேட்காமலே எங்களை கடனாளியாக்கிவிட்டீர்களே!
இலவச தொலைகாட்சி பெட்டியை கலைஞர் ஆரம்பித்துவைத்தார். அதை மிக்ஸி,கிரைண்டர், மின்விசிறி என ஜெயலலிதா விரிவுபடுத்தினார். ரேஷன் அரசியை தேவையில்லாமல் கிலோ இரண்டு ரூபாய்க்கு கலைஞர் தந்தார். அதை விலையில்லா அரிசியாக்கினார் ஜெயலலிதா! நெல் விவசாயம் தமிழகத்தில் பெரும் வீழ்ச்சியடைந்து இன்று வெளி மாநிலங்களில் இருந்து அரசி தருவிக்கிறோம்! இந்தியாவிலேயே அதிக இலவசங்களை தந்த மாநிலம் தமிழகம் தான்!
அவசியமில்லாமல் தரப்படும் இலவசங்களும், வாங்கப்படும் கடன் பெரும்பாலும் கரப்ஷன் வளர்வதற்கே வழிவகுத்துள்ளது!
Also read
கடன் கொடுப்பவன் விதிக்கும் நிபந்தனைகளை ஆட்சியாளர்கள் மக்களிடம் தெரிவிப்பதே இல்லை. சாலைகளில் சுங்கச்சாவடிகள் வைத்து காசு பறிப்பதை கடன் கொடுத்தவன் தானே கற்பித்தான்! இப்படி நாம் பெறும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.
மின்சாரத் துறைக்கு தான் அதிக கடன் தரப்பட்டுள்ளது 1,34,000 கோடி ரூபாய்! இப்படி கடன் கொடுப்பதன் மூலம் மின்சாரத்துறையில் அரசு உற்பத்தியை அதிகப்படுத்த தடை போட்டு, தனியார் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்க கட்டளை இடுகிறான்,கடன் தந்தவன். இதனால் தான் செலவு அதிகரித்து, ஊழலுக்கும் வகை ஏற்படுகிறது. கடன் கொடுப்பவன் மீண்டும், மீண்டும் நம்மை கடனாளியாக்கவே கடன் தருகிறான். ஆகவே, கடனை தவிர்க்க, கரப்ஷனை, ஒழிக்க சுதேசி பொருளாதாரமே தீர்வு!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அருமை
கொடுக்கப்படுகின்ற இலவசங்களுக்கு எல்லாம் அழகாக விளக்கம் கூறு இருக்கிறது இந்த திமுக அரசு.
அதை கூறாமல் விமரிசனங்கள் செய்வது இலவசங்கள் தவறு என்பது நேர்மையான பார்வை அல்ல
தமிழ்நாடு நிதி துறையின் வெள்ளையறிக்கை!
கடன் வாங்கி முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருவாயிலிருந்து கடனை அடைப்பது, தீர்ப்பது ஒரு வகை.
கடன் வாங்கி வருவாய் ஈட்ட பயன்படுத்தாமல் தின்று தீர்ப்பது, ஆடம்பரச் செலவு செய்வது. பழைய கடனை அடைப்பதற்கு மீண்டும் புதிய கடன் வாங்குவது, சடங்கு சம்பிரதாயம் போன்ற உற்பத்தி சாரா செலவுகளை மேற்கொள்வ கடன் வாங்குவது
இது ஒரு வகை.
மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகையில் ஒழுக்கமற்ற நேர்மையற்ற முறையில் கடனை வாங்கி உபயோகமற்ற செலவு செய்து கடன் சுமையை அதிகரித்த அரசாட்சியை வெளி வீதிக்கு கொண்டு வருவதன் நோக்கமே இந்த வெள்ளை அறிக்கை.
இந்த வகையில் நிதித்துறையின் வெள்ளை அறிக்கை வரவேற்கக் கூடியதே.
நாங்கள் வளர்ந்த காலம் ஐம்பதுகள்.
எங்கள் அம்மா அடிக்கடி சொல்வார்கள்: ‘ கடன் வாங்கி கடன் கொடுப்பதும் மரமேறி கைவிடுவதும் ஒன்று’ என்று. மேலும் இல்லையென்று அடுத்த வீட்டில் அவசரத்துக்குக்கூட உப்புகூட கடன் வாங்கக் கூடாது என்று சொல்வார்கள்.
அவ்வாறு எங்களை-ஆறு பிள்ளைகளை ஏழ்மையிலும் இருப்பதை வைத்து கடன் வாங்காமல் வளர்த்து ஆளாக்கினார்கள்.
பணியில் இருக்கும் போது எங்கள் அலுவலகத்தில் சக அலுவலர்கள் வீடு கட்டும் எண்ணத்தில் போட்டி போட்டுக்கொண்டு கடன் வாங்கி வீடு கட்டுவார்கள். ஆனால் நான் மட்டும் பொறுத்திருந்து சேமித்து வீடு கட்டினேன். கடன் வாங்காமல் வீடு கட்டினேன் என்பதை நான் பெருமையாக கூறிக் கொள்வேன்.
தற்போது அரசாங்கமே கடன் வாங்குகிறது மக்களையும் கடன் வாங்க ஊக்குவிக்கிறது. உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வட்டி இல்லா கடன் அரசு உதவியாக கொடுப்பது தவறில்லை. ஆனால் அவ்வாறு தொழில் தொடங்க கடன் கொடுப்பதாக திட்டங்களை அறிவித்து விட்டு அந்த தொகையை பணக்காரர்களை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி கடன் வாங்கிவிட்டு பிறகு வாங்கிய தொகையை திரும்ப கட்டாமலேயே ஏமாற்றி தப்பித்து வெளிநாடு ஓடிவிடும் சூழல்தான் உருவாகியுள்ளது.
சில பொருளாதார நிபுணர்கள் அரசு கடன் வாங்குவது அவசியம், தவறு இல்லை என்று ஆலோசனை கூறுகிறார்கள். இந்த ஆலோசனை கூட
“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை” என்ற திருக்குறளுக்கு எதிரான ஒன்றாகும்.
அரசு வாங்கும் கடன்கள் மக்களிடமிருந்து வாக்குகள் பெற வேண்டி, இலவசம் என்ற பெயரில் வழங்குவதற்காக, வாங்கியதாக, வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி கட்டுவதற்காக, கடன் வாங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது என்பது
மரமேறி கையைவிட்ட மடத்தனமான செயலாகத்தான் கொள்ள வேண்டும்.
அரசு கடன் வாங்கலாம், அந்த கடன் தொகையை லாபகரமாக முதலீடு செய்து, அந்த லாபத்தில் இருந்து வட்டி கட்டுவதும், கடனை திருப்புவதும், மக்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கம் என்ற வகையில் இருந்தால் அந்த கடன் தேவையான கடன்தான்.
வெள்ளை அறிக்கை வெளியிடும் தற்போதைய அரசு முடிவுறும் காலங்களில் அடுத்த அரசு இதேபோல் வெள்ளையறிக்கை வெளியிடாமல் பாதுகாத்து அரசாட்சி செய்யுமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான்.
ஏனென்றால் வருவாய் ஈட்டுவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தாமல் இலவசம் என்ற பெயரில் பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு அவைகளை நிறைவேற்ற முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கின்ற நிலையோ அல்லது அதை சமாளிக்க வேறு மாதிரியான விலையற்ற நடவடிக்கைகளை, அல்லது மதுபான விற்பனை அதிகரிப்பு செய்யும் பட்சத்தில் மக்களின் அதிர்ப்தியை சம்பாதிக்காமல் இருக்க முடியாது.
என்னதான் மக்களுக்கு இலவசமாக செய்தாலும் அவர்கள் ஐந்து வருடங்கள் கழித்து தேர்தல் நேரத்தில் வேறு மாதிரிதான் சிந்திப்பார்கள், முடிவெடுப்பார்கள். மேலும் ஒரு முறை வாய்ப்பு தருவார்கள் என்று எண்ணி இருப்பது ஏமாற்றமாகவும் ஆகக்கூடும்.
தற்போதைய தமிழ்நாடு நிதியமைச்சர் தயாரித்த வெள்ளை அறிக்கையில் கடைசி பாகத்தில் ‘நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது நிதி நிலைமை சரியில்லை, அனைத்துக்கும் காரணம் முந்தைய ஆட்சியின் தவறான செயல்பாடுகள் அதற்கான வெள்ளை அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பித்து விட்டோம் அதனால் எங்களை மன்னித்து விடுங்கள்.’என்று பின்வாங்குதல் எதுவும் தவறில்லை. அதற்கு பதிலாக உற்பத்தி சார்ந்த திட்டங்களை வகுக்கும் வேலைவாய்ப்பை அதிகரித்தும் விலைவாசியை குறைத்தும் செயல்பட்டால் மக்கள் தேர்தல் கால வாக்குறுதிகளை மறந்து வாழ்த்துவார்கள். இதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் அரசுக்கு தேவை. தைரியமேவே ஜெயதே!
இலவசம் என்பது மக்களுக்கு அரசியல்வாதிகள் கொடுக்கும் லஞ்சம் அந்த ஊற்றுக்கண் மூடப்பட வேண்டும்.
“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து”
இந்த திருக்குறள் ஒன்று போதும் லஞ்சத்துக்கும் ஈகைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும்.
இவற்றைப் புரிந்து கொண்டு இனி வரும் அரசுகள் நடப்பது நல்லது.
புள்ளிவிவரங்களுடன் கூடிய ஆய்வுக்கட்டுரை,
சரியான பார்வை.
“விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் சக்கரை உள்ளிட்ட பொருள்களை ரேஷனில் தருவதற்கு ஐயாயிரத்து சொச்சம் கோடி செலவாகி வரும் நிலையில் ரேஷன் கார்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாகத் தருவோம் ” – இது தவறான வாதம். You are politically wrong.